




தமிழக அரசு சார்பில் நிதி திரட்டுவதற்காக புதிய செயலியை இன்று துவக்கி வைத்தார் நிதி அமைச்சர் தியாகராஜன். அப்போது அவர் கூறியதாவது, “ஜனநாயக நாட்டில் அரசு எடுக்கும் எந்தவித நடவடிக்கைகளும் என்ன நிலையில் உள்ளது என்பது போன்ற விபரங்களை மக்கள் வெளிப்படையாக தெரியும் வகையில் கொண்டுவருவது மிக முக்கியம். அதனால் தான் திமுக தலைமையிலான அரசு பொறுபேற்றதும் முதலமைச்சர் அனைத்திலும் உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் என உத்தரவு பிறபித்தார்.
ஏற்கனவே ஒன்றிய அரசால் துவங்கப்பட்ட நிதி திரட்டுவதற்கான வலைத்தளம் செயல்பாட்டில் இருக்கிறது. ஆனால் அதில் சில குளறுபடிகள் மற்றும் பராமரிப்பற்று கிடப்பதால் தனியாக ஒரு வலைத்தளம் உருவாக்க முதல்வரின் அனுமதியுடன் திறக்க திட்டமிட்டிருந்தோம். அதனை தற்போது உருவாக்கி வெளியிட்டுள்ளோம். அதே போல் முதல்வரின் உத்தரவின் பேரில் மே 6தேதி வரை திரட்டப்பட்ட நிதிகளை தனி கணக்காகவும், அதன்பின்னர் திரட்டப்பட்ட நிதிகளை கரோனாவின் பேரில் சேமித்து வைத்துள்ளோம். இதன் அடிப்படையில் நேற்று வரை 472கோடி ரூபாய் இதுவரை மக்களிடம் இருந்து வந்துள்ளது” என கூறினார்.