Skip to main content

"விருத்தாசலம் தொகுதியில் வீடு பார்க்கச் சொல்லிவிட்டேன்!" - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

Published on 27/03/2021 | Edited on 27/03/2021

 

DMDK candidate plan to buy new house in virudhachalam constituency

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் அமமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.திக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த், கடந்த ஒருவார காலமாக விருத்தாசலம் தொகுதியில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்து வருகிறார். இந்நிலையில், இன்று விருத்தாசலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “விருத்தாசலத்தில் கடந்த 10 நாட்களாக அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறேன். மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது. நான் போகாத ஊரே இல்லை. ஏற்கனவே விஜயகாந்த் ஜெயித்த தொகுதியில், அவர் மக்களுக்காக எவ்வளவு செய்திருக்கிறார் என்பது மக்களுக்குத் தெரியும்.

 

அவர் செய்த நலத்திட்டங்களை மக்களே என்னிடம் தெரிவிக்கின்றனர். அது நிச்சயமாக வாக்குகளாக மாறும். மேலும் அமோக வரவேற்பு உள்ளது. அ.ம.மு.க கூட்டணி சார்பில் நான் போட்டியிடுகின்ற நிலையில், விருத்தாசலத்தில் சுயேட்சையாக ஒரு பெண்ணிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுவர்களில் சின்னங்கள் வரையக் கூடாது என விதிமுறைகள் உள்ளது. ஆனால், அதனையும் மீறி அந்தச் சின்னம் நகரப்பகுதியில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அந்தச் சின்னம் இருக்கக்கூடாது எனத் தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளோம். ஆனால், இதுவரை முடிவு வரவில்லை. விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். சுதீஷ் வேட்புமனுத் தாக்கல் செய்த அன்று மட்டும்தான் இருந்தார், உடனே ஊருக்குக் கிளம்பிவிட்டார். அப்படி இருக்கும்போது எனக்கு கரோனா பரிசோதனை செய்யவேண்டும் என்று கூறி நான் பிரச்சாரத்தில் இருந்தபோது என்னை வலியுறுத்தியது, கண்டிக்கத்தக்கது. 

 

234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்துள்ளார்களா? எனக்கு ஏற்கனவே கரோனா வந்துவிட்டது எனத் தெளிவாகக் கூறினேன். ஏற்கனவே பரிசோதனை செய்துவிட்டுத்தான் பிரச்சாரத்திற்கு வந்துள்ளேன். கரோனா தடுப்பூசி இரண்டு முறை போட்டுள்ளேன். எனக்கு எந்த அறிகுறியும் இல்லை எனத் தெளிவாகச் சொல்லியும் பரிசோதனைக்கு வரவேண்டும் எனக் கூறி என் பிரச்சாரத்தை தடை செய்யவே முயற்சி எடுத்தனர். அதை நாங்கள் கண்கூடாகவே பார்த்தோம், ஆனால் நாங்கள் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டவர்கள். அதனால் மதிய உணவிற்கு வரும்பொழுது வந்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள் எனக் கூறினேன், அதுபோலவே வந்து டெஸ்ட் எடுத்தனர். பின்னர் ஐந்து மணி நேரத்தில் முடிவு கொடுப்பதாக தெரிவித்தனர், ஆனால் மறுநாள் ஆகியும் ரிசல்ட் வரவில்லை. என்னைப் பிரச்சாரத்திற்குப் போகவிடாமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. 

 

இது குறித்து அறிந்த நான், தனியாகவும் பரிசோதனை எடுத்துக் கொண்டேன். அரசு சார்பில் பரிசோதனை எடுத்தாலும் அதனைக் காரணமாகக் கொண்டு என்னை தேர்தல் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பார்கள் என்பதால் பிரைவேட் மூலம் டெஸ்ட் எடுத்துக் கொண்டேன். அன்று இரவே எனக்கு ஏழு மணிக்கு ரிசல்ட் நெகடிவ் எனத் தெரியவந்தது. அரசு தரப்பில் எடுத்த பரிசோதனை முடிவை மறுநாள் வரை கூறவே இல்லை. எனக்குத் தனியார் மூலம் நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததை தெரிந்துகொண்ட பிறகு நெகட்டிவ் என சர்டிபிகேட் கொடுத்தனர். இது எனக்கு உண்மையாகவே மன வருத்தத்தைக் கொடுத்தது. வேட்பாளர் என்பவர் மக்களைச் சந்திக்க வேண்டும், அதைத் தடுக்க நினைத்தார்களே தவிர மக்களை சந்திக்க விடவில்லை. கடவுள் இருக்கிறார், அதனால் எனக்கு நெகட்டிவ் என உறுதியானது. 

 

மக்களை சந்திக்கும் என்னை யாராலும் தடுக்க முடியாது. தே.மு.தி.கவின் தேர்தல் அறிக்கை மொத்தம் 16 உள்ளது. விருத்தாசலத்தை பற்றி 2006 இல் இருந்து எனக்குத் தெரியும். விருத்தாசலத்தில் எனக்குத் தெரியாத இடங்களே கிடையாது. விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிப்பது தான் எங்களுடைய முதல் வாக்குறுதி. இது விவசாயம் சார்ந்த பூமி. சித்தூர், பெண்ணாடம் சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டுள்ளன, இதனால் விவசாயிகளுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கரும்பு விவசாயம் செய்யும் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. விளைவித்த கரும்புகளை எங்கே அனுப்புவது எனத் தெரியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அனைத்துப் பிரச்சினைகளும் சர்க்கரை ஆலைகளை மையப்படுத்தி அமைந்துள்ளது.

 

இந்த ஆலைகளை மீண்டும் திறந்து விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகைகளை பெற்றுத்தருவதே, அடுத்த வாக்குறுதியாகும். தமிழ்நாட்டைப் பொருத்தவரை தவித்த வாய்க்குத் தண்ணீர் தரவேண்டும். ஆனால் நாங்கள் கொடுத்ததைக் கூட இந்த ஆட்சி தடுக்கிறது. பல இடங்களில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. நான் ஜெயித்து வந்த உடன் தண்ணீர்ப் பிரச்சனையைச் சரி செய்யப்படும், வடிகால் வசதி சாலை வசதி செய்து தரப்படும், வேப்பூர் உள்ளிட்ட இடங்களில் சுகாதார நிலையங்கள் அமைத்துத் தரப்படும். நகைக் கடன் தள்ளுபடி ஒட்டுமொத்த பெண்களையும் மொத்தமாகப் பாதித்துள்ளது. சொத்து உள்ளவர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி ஆகிவிட்டது, சொத்து இல்லாதவர்களுக்கும் நகைக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், ஒட்டுமொத்த பெண்களின் குரலாக நிச்சயமாக சட்டசபையில் பேசுவேன். 

 

சொத்து இல்லாமல் இருப்பவர்கள் தான் உண்மையான ஏழைகள், அவர்களுடைய நகைக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும். இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நான் வெற்றி பெற்றவுடன் நிறைவேற்றுவேன். கேப்டன் விஜயகாந்த் 234 தொகுதிக்கும் தலைவர். நான்தான் அவருக்காக விருத்தாசலம் தொகுதியில் வேலை பார்த்தேன், அது நன்றாக எல்லோருக்கும் தெரியும். நான் விருத்தாசலம் தொகுதியில் வீடு பார்க்கச் சொல்லி விட்டேன். எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து மக்கள் பிரச்சினைக்காக முழு நேரமாக ஈடுபடுவேன். விருத்தாசலம் தொகுதிக்கு விஜயகாந்த் நிச்சயம் பிரச்சாரத்திற்கு வருவார். கும்மிடிப்பூண்டியில் ஆரம்பித்து கடந்த 4 நாட்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விருத்தாசலம் மட்டுமில்லை, மருத்துவரின் ஆலோசனையின்படி தே.மு.தி.க போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளுக்கும் வருகிறார். எந்தத் தேதியில் வருகிறார் என அதிகாரப்பூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவர் என் பிள்ளை இல்லை இனி உங்களின் பிள்ளை'- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'He is not my child not your child' - Premalatha Vijayakanth speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், '“விஜயபிரபாகரன் நினைத்திருந்தால் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டிருக்கலாம். அவர் இந்த மண்ணின் மைந்தன் என்பதால், நம் சொந்த பந்தங்கள் உள்ள இந்த பூமியில், இங்குள்ள மக்களுக்காக,  தன் தந்தையின் கனவைச் சுமந்து கொண்டு விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.படித்தவர், பண்பாளர்,  இளைஞர், கருணை உள்ளம் கொண்டவர்,  மக்களுக்காக உழைக்க வேண்டுமென்ற நல்ல சிந்தனையோடு வந்துள்ளார்.

விஜயபிரபாகரன் என் பிள்ளை இல்லை;  இனி அவர்  உங்கள் பிள்ளை. அனைத்துத் தாய்க்குலத்தின் பிள்ளை. இன்னும் கல்யாணம் கூட ஆகல. உக்களுக்காக உழைக்க வந்திருக்கிறார். உங்கள் தலைமையில் தான் அவரது திருமணத்தை நடத்துவேன்.  எனது மகன் வெற்றி பெற்றால், தொகுதி முழுவதும் இலவச தையல் பயிற்சி மையம் அமைத்து,   பயிற்சி நிறைவு பெற்றபின், அனைவருக்கும் தையல் மிஷின் வழங்குவோம். படிக்காத, படித்த இளைஞர்களுக்கு இலவச கணினி பயிற்சி மையங்கள், தொகுதி முழுவதும் சொந்த செலவில் அமைப்போம். தீப்பெட்டி தொழிற்சாலை, பட்டாசுத் தொழிற்சாலை, ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் தீர்வு காணப்படும். மற்ற வேட்பாளர்களைப் பற்றி நான் பேசமாட்டேன்.

மற்றவர்களைக் குறைசொல்லி அதில் ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் நம் கட்சிக்கு இல்லை. நான் விருதுநகர் மக்களை நம்புகிறேன்.  நாங்கள் சென்னையில் இருப்பதாக நினைக்க வேண்டாம். இனிமேல்  விருதுநகரில் தான் இருப்போம். கேப்டனை நம்பியவர்கள் கைவிடப்பட்டதாக சரித்திரம் இல்லை. குடும்ப பாரம்பரிய சொந்த பந்தம், ரத்த பந்தம் இருக்கிறது விருதுநகர் தொகுதியில், விஜயபிரபாகரன் உண்மையாக உழைத்து, மாநில அளவில் முதன்மைத் தொகுதியாக கொண்டு வருவார். தமிழகம் முழுவதும் அதிமுக - தேமுதிக கூட்டணிக்கு அமோக வரவேற்பு உள்ளது. நான் பிரச்சாரத்துக்குச் செல்லும் இடத்திலெல்லாம்,  விஜயபிரபாகரனுக்கு  பிரச்சாரம் செய்யவில்லையா என்று கேட்பார்கள்.  அவர் என் பிள்ளை இல்லை.   அங்குள்ள லட்சக்கணக்கான தாய்மார்களின் பிள்ளை.  அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்று சொன்னேன். உங்களை நம்பி நானும்,  கேப்டனும்,  விஜயபிரபாகரனை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். எல்லாம் மொழியும் அவருக்கு தெரியும்.  அமைதியாக இருக்கிறார் என்று நினைக்க வேண்டாம், அவர் பயங்கர ‘ஷார்ப்’,  அறிவாளி,  நிச்சயமாக உங்களுக்காக  உழைப்பார்”என்று பேசினார். 

Next Story

விஜயகாந்த் மறைந்து 100ஆவது நாள் - கண்ணீருடன் பிரேமலதா அஞ்சலி

Published on 06/04/2024 | Edited on 06/04/2024

 

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவிடத்திற்கு இன்றும் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்த் மறைந்து இன்றோடு 100 நாள்கள் நிறைவைடைகிறது. இதையொட்டி பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மகன் சண்முகபாண்டியன் உடனிருந்தார். அவருக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

படங்கள் - எஸ்.பி.சுந்தர்