
சட்ட சபையில் உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத்தலைவராக அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதன் பின் தர்ணாவில் ஈடுபட்ட பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்களை சபாநாயகரின் உத்தரவின் பேரில் அவைக் காவலர்கள் வெளியேற்றினர்.
பின் பேசிய சபாநாயகர் அப்பாவு, “சட்டமன்ற விதியின் படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி தான் அங்கீகரிக்கப்பட்டது. மற்ற பதவிகள் எல்லாம் அவர்களது சட்டமன்ற உறுப்பினர்களை திருப்திபடுத்தக் கொடுக்கும் பதவிகள். சபையில் இருக்கைகள் ஒதுக்கப்படுவது குறித்து முடிவெடுப்பது பேரவைத் தலைவரின் முழு விருப்பம்தான். அதில் யாரும் தலையிட முடியாது” என்று கூறினார்.
வெளி நடப்பு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “நியாயமாக நடுநிலையோடு செயல்படவேண்டிய சபாநாயகர் அரசியல் நோக்கோடு செயல்படுவதாக நாங்கள் நினைக்கின்றோம். சட்டமன்றம் என்பது வேறு. கட்சி என்பது வேறு. அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ள முடியாத திமுக கொல்லைப்புறத்தின் வழியாக, சட்டசபை வழியாக பழிவாங்க நினைக்கின்றது” எனக் கூறினார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க மறுத்ததை கண்டித்து அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டது. சென்னையில் வள்ளுவர்கோட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் போராட்டம் நடக்கும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று நடைபெற இருந்த உண்ணாவிரதத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், சட்டமன்றத்தில் ஜனநாயகப் படுகொலை நடந்ததாக கூறி பழனிசாமி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷங்களை எழுப்பி கருப்பு சட்டையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.