Skip to main content

அவருக்கு ஏதாவது நேர்ந்தால் இ.பி.எஸ் தான் பொறுப்பு! -ஜவாஹிருல்லா பேட்டி

Published on 15/04/2018 | Edited on 15/04/2018
M. H. Jawahirullah


 

தமிழக அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
 

கோவை போலீஸ் கமிஷனர் பெரியய்யாவை சனிக்கிழமை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா சந்தித்து மனு கொடுத்தார்.
 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
 

கோவை சிறையில் ஆயுள்தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்ட வசீர், ரிஸ்வான், தஸ்தகீர், சபீர் ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். இருசிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ள அபுதாகிர் என்ற கைதி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார். சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் அபுதாகிரை தமிழக அரசு இது வரை விடுதலை செய்யவில்லை. எனவே தமிழக அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம். ஒரு மாத பரோலுக்கு பின்னர் மீண்டும் அபுதாகிரை சிறையில் அடைத்ததன் காரணமாக உடல் நலம் மீண்டும் பாதிக்கப்பட்டு உள்ளது.
 

எனவே சிறை முன்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தோம். தற்போது அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரது சிகிச்சைக்கான செலவுகளை ஏற்று உள்ளோம். அபுதாகிருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு எடப்பாடி பழனிசாமி அரசுதான் பொறுப்பு ஏற்கவேண்டும். அபுதாகிருக்கு நிரந்தரமாக பரோல் கொடுக்க வேண்டும், அல்லது அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். நீண்ட காலமாக சிறையில் இருப்பவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது அறிவிக்கப்பட்டது ஆனால் இதுவரை யாரையும் தமிழக அரசு விடுவிக்க வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்கத் தடை

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Ban on sale of cotton candy across Tamil Nadu

புதுச்சேரியின் கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவுப் பாதுகாப்புத் துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்திருந்தனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கத் தடை விதிக்கப்பட்டது. அரசிடம் இருந்து முறையான ஒப்புதலோடு விற்பனைக்கான உரிமம் பெற்ற பிறகுதான் மீண்டும் பஞ்சு மிட்டாயை விற்பனை செய்ய வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் பிறப்பித்திருந்தார்.

அதே சமயம் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறையின் சார்பில் சென்னை மாவட்ட அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினர் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஞ்சுமிட்டாய் தயாரிக்கும் இடங்களில் சோதனை நடத்தி தரமில்லாத மற்றும் ரசாயனம் கலக்கப்பட்ட பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்திருந்தனர்.

மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமைன் பி' என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பிங்க், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிட வேண்டாம் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் ‘ரோடமைன் பி’ உள்ளிட்ட ரசாயனங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பரிந்துரை செய்திருந்தது. 

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் (படங்கள்)

Published on 07/02/2024 | Edited on 07/02/2024

 

 

2024 ஆம் ஆண்டுக்கான மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் இன்று (07-02-24) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.