
திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து இன்று வரை மெத்தனமாகவே நடந்துகொண்டிருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இந்த ஆட்சி அமைந்ததிலிருந்து இன்று வரை மெத்தனமாகவே நடந்துகொண்டிருக்கிறது. அதிமுக கொண்டுவந்தவற்றை இன்று அவர்கள் திறந்துவைத்துக்கொண்டுள்ளனர். ரூ. 48 கோடியில் 139 பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டு 11 முறை அந்த டெண்டர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க மாநகராட்சி முதல் கிராமங்கள் வரை பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளன. கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களைச் சிந்திக்காமல் சொத்துவரி, மின்கட்டணம் ஆகியவற்றை இந்த அரசு உயர்த்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.