Skip to main content

ராகுல் மற்றும் அதானியால் தொடரும் அமளி; நாடாளுமன்றம் 4 ஆவது நாளாக ஒத்திவைப்பு

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

Continually in both of them; Parliament adjourned for 4th day

 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப்.13ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கியது. இந்த இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

 

நாடாளுமன்றத்தின் இரண்டாம் அமர்வு தொடங்கியதும் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் ராகுல் காந்தி வெளிநாட்டிற்குச் சென்று நாடாளுமன்றப் பிரச்சனைகள் குறித்து விவாதித்தது தவறு என்றனர். அதேபோல் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அதானி உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு மக்களவை கூடியது. அப்போது மீண்டும் பாஜகவினர் இந்திய ஜனநாயகத்தை இழிவு செய்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். அதேபோல் எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பின. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் மறுநாள் வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

 

அதேபோல் நேற்று முன்தினமும் நேற்றும் மக்களவை கூடியதும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதும் அவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதும் 2 மணிக்குப் பின் அவை கூடியதும் மீண்டும் அமளி ஏற்பட்டு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதும் தொடர்கதையாகி உள்ளது.

 

இந்நிலையில் 4 ஆவது நாளாக நாடாளுமன்றம் இன்று கூடியது. இன்றும் இரு அவைகளிலும் பேரவை துவங்கிய உடன் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக 4 ஆவது நாளாக நாடாளுமன்றம் இன்றும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவின் ஜனநாயகம் குறித்து வெளிநாட்டில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, அதற்கு ராகுல்காந்தி மன்னிப்பு கோர வலியுறுத்தி பாஜக உறுப்பினர்கள் ஒருபுறம் அமளியில் ஈடுபட்டனர். மறுபுறத்தில் எதிர்க்கட்சியினரும் அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும், பணவீக்கம், டீசல், பெட்ரோல் விலை உயர்வு போன்ற காரணங்களுக்காக அமளியில் ஈடுபட்டனர். இதனால் 4 ஆவது நாளாக நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

 


 

சார்ந்த செய்திகள்