Skip to main content

'தமிழ்நாட்டிலேயே இதுதான் முதல்முறை'- விதி எண் 110 - இன் கீழ் முதல்வர் அறிவிப்பு

Published on 10/10/2023 | Edited on 10/10/2023

 

Chief Minister's announcement under 'This is the first time in Tamil Nadu'-110-

 

நேற்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக பேரவை கூடி இருக்கிறது. இதில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் விதி எண் 110-இன் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். உரையில், ''அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரி, அதன் மீதான வட்டி மற்றும் அபராதத் தொகை வணிகர்களின் பெயர்களில் இன்னமும் நிலுவையில் இருந்த வருகிறது. இந்த நிலுவைத் தொகையை வழங்குவதில் சலுகைகள் வழங்கப்பட்டு, இந்த பிரச்சனைகளுக்கும் முடிவு காண வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர்கள் நீண்ட நாட்களாக முன்வைத்து வருகிறார்கள். இந்த கோரிக்கைகளை கவனமுடன் பரிசீலித்து இத்தகைய பழைய நிலுவைத் தொகைகளை வசூலிப்பதில் ஒரு சமாதான திட்டத்தை அறிவித்து செயல்படுத்திட அரசு முடிவு செய்துள்ளது.

 

கடந்த ஆண்டுகளில் இந்த நிலுவைத் தொகைகள் குறித்து பல சமாதான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருந்தாலும் புதியதொரு அணுகுமுறையோடு கூடுதல் சலுகைகளுடன் இந்த திட்டம் இப்பொழுது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூபாய் 50 ஆயிரத்திற்கு குறைவாக வரி, வட்டி, அபராதத்தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு நிலுவைத் தொகையானது முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும். ஒவ்வொரு மதிப்பாண்டிலும் ரூபாய் 50 ஆயிரத்திற்கு உட்பட்ட நிலுவையினங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும். தமிழ்நாட்டின் வரலாற்றில் சிறு வணிகர்களுக்கு இவ்வாறு முழுமையாக வரி நிலுவை தள்ளுபடி செய்யப்படுவது இதுதான் முதல் முறை. அரசின் இந்த முடிவால் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 398 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 95 ஆயிரத்து 502 வணிகர்கள்  தங்களது நிலுவைத் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டு பயனடைவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

Chief Minister's announcement under 'This is the first time in Tamil Nadu'-110-

 

இப்படி நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்பட்ட வணிகர்கள் தவிர இதர வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் அனைவரும் ரூபாய் 50 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை நிலுவையில் உள்ளவர்கள்; ரூபாய் 10 லட்சம் முதல் 1 கோடி வரை வரி நிலுவையில் உள்ளவர்கள்; ரூபாய் ஒரு கோடி முதல் 10 கோடி வரை நிலுவையில் உள்ளவர்கள்; ரூபாய் 10 கோடிக்கு மேலாக நிலுவையில் உள்ளவர்கள் என நான்கு வரம்புகளின் கீழ் கொண்டு வரப்படுவர். மேற்கூறிய வரம்புகளில்  முதல் வரம்பில் உள்ளவர்கள் மொத்த நிலுவைத் தொகையில் 20 விழுக்காட்டை கட்டி நிலுவை வழக்கில் இருந்து வெளியே வரலாம் அல்லது நிலுவையில் உள்ள வணிகவரி, வட்டி மற்றும் அபராதத் தொகையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு தொகையைக் கட்டி நிலுவை வழக்குகளில் இருந்து வெளிவரலாம். இதர மூன்று வரம்புகளில் உள்ள வணிக பெருமக்களும், நிலுவையில் உள்ள வணிகவரி, வட்டி மற்றும் அபராதத் தொகையில் குறிப்பிட்ட விழுக்காட்டை கட்டினால் நிலுவை வழக்குகளில் இருந்து வெளியே வரும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த திட்டத்தின் முக்கிய சலுகையாக நிலுவைத் தொகையினை வணிகர்கள் கட்ட முன்வரும் நாள் வரை அவர்களுடைய கணக்கில் ஏற்றப்பட ஏதுவான திரண்ட வட்டி தொகை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டு வணிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் செயல்படுத்தப்படவிருக்கும் இந்தத் திட்டம் வரும் 16.10.2023 முதல் நான்கு மாத காலம் நடைமுறையில் இருக்கும். 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி வரை இந்த சமாதான திட்டம் நடைமுறையில் இருக்கும். அரசின் இந்த முன்னோடி முயற்சியை முழுமையாக வணிகர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.