
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சரவையிலும் அவருக்கு இடம் அளிக்கப்பட்டது. அதன்படி, அவர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராகக் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பதவி வகித்து வருகிறார்.
அதே சமயம் செந்தில் பாலாஜி அமைச்சராகப் பதவியேற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘அமைச்சர் பதவியா? ஜாமீனா? என்பதை அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு வரும் 28ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்’ எனக் கூறி வழக்கு விசாரணையை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
மற்றொரு புறம், பெண்கள் குறித்தும், சைவ - வைணவ சமயம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி சர்ச்சையில் சிக்கியிருந்தார். இவரது பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு திருச்சி சிவா எம்.பி. அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.
இந்த சூழ்நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்ட சிக்கலை எதிர்கொண்டு வரும் செந்தல் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகிய இருவரும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டு விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் புதிதாக அமைச்சர் பொறுப்பை ஏற்பார் என்றும், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் துறையும் மாற்றப்படுவதாகக் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைகளை பிரித்து, போக்குவரத்து துறை
அமைச்சரான எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்படும் என்றும் பொன்முடி வகிக்கும் வனத்துறை, தகவல் தொழில்நுட்பத் துறையை கவனித்து வரும் பிடி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கொடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினரான லட்சுமணன் அமைச்சரவைக்குள் புதிதாக கொண்டு வரப்பட்டு அவருக்கு தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.