Skip to main content

வேட்பாளர், தொகுதிப் பட்டியலை வைத்து பிரார்த்தனை செய்யும் தலைவர்களின் குடும்பத்தினர்

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

 

இறுதி வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிட உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறக்கிறது. வேட்பாளர்களும் அவர் சார்ந்த கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிரதான கட்சிகளின் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர்.

 

Tirumala temple



இந்தநிலையில் தலைவர்களின் குடும்பத்தினர் என்ன செய்கின்றனர் என்று விசாரித்தோம். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் உள்ளார். அவரது மகன்களை அரசியலில் ஈடுபடுத்த அவரது கட்சியினர் விரும்புகின்றனர் என்பதால் விஜய பிரபாகரனை கட்சி மேடைகளில் பேச வைத்தனர். 
 

இந்த நிலையில் விஜய பிரபாகரன் பிரச்சாரத்தில் அதிகம் தென்படவில்லை. என்ன காரணம் என்று விசாரித்தபோது, விஜயகாந்த் மகன்கள் இருவரும், தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிப் பட்டியலையும், வேட்பாளர்கள் பட்டியலையும் கோவில் கோவிலாக வைத்து வழிபட்டு வருகிறார்களாம். விஜயகாந்த் எப்போதுமே கடவுள் பக்தி உள்ளவர் என்பதால் இதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 
 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,  தருமபுரி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் குடும்பத்தினர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வேட்பாளர்கள் பட்டியலையும், தொகுதிப் பட்டியலையும் வைத்து பிரார்த்தனை செய்தார்களாம். 
 

இதேபோல் ஓ.பி.எஸ். மகன் தேனியில் போட்டியிடுகிறார். இதனால் ஓ.பி.எஸ். தனது மகனுக்காக திருப்பதியில் பிராத்தனை செய்ய சொல்லி அனுப்பியிருக்கிறாராம். 
 

தூத்துக்குடியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் கனிமொழி. தேர்தல் களத்தில் பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவரது தயார் ராஜாத்தியம்மாள் திருச்செந்தூரில் சிறப்பு வழிபாடு செய்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தீவிர ஆன்மீக பக்தர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அவரும் திமுக கூட்டணி வெற்றி பெற ஆலயங்களில் வழிபட்டு வருகிறாராம். 

 

 

 

சார்ந்த செய்திகள்