
தமிழகத்தில் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் எனத் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (04.06.2024) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாளை வெளிவர இருக்கும் தேர்வு முடிவுக்காகப் பொதுமக்கள் ஆர்வமுடன் நாளைய விடியலுக்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், தற்போதைய பாஜக தென் சென்னை வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் வடபழனி முருகன் கோயிலில் வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாளை நல்ல செய்தி வர வேண்டும் என்று முருகனிடம் வேண்டுகோள் வைத்தேன். தமிழகத்தில் பாஜக அதிகமான தொகுதியில் வெற்றிபெறும்” எனத் தெரிவித்தார்.