ஆளுநர் அரசியல் பேசக்கூடாது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கூறுவதைத்தான் ஆளுநர் கேட்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி, “தேசிய ஜனநாயக கூட்டணியோடு நாங்கள் டெல்லியில் கூட்டணியில் இருக்கிறோம். வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம். நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம்.
தமிழ்நாடு ஆளுநர் அவரை நியமித்த கட்சியின் கொள்கைகளை பேசி வருகிறார். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் கூறுவதைத் தான் ஆளுநர் கேட்க வேண்டும். அதில் குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டலாமே தவிர வேறு எதுவும் அவர் பேசக்கூடாது” என்றார்.