Skip to main content

"அரசின் நடவடிக்கைகளை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்!" - அன்புமணியிடம் பேசிய மோடி! 

Published on 05/04/2020 | Edited on 05/04/2020

 

நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் வருகிற 8-ந்தேதி டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி. அந்த ஆலோசனையில், கரோனாவை தடுப்பதில் மத்திய-மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், இனி என்ன மாதிரி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும், தேசிய ஊரடங்கை தொடரலாமா ? வேண்டாமா ? என்பது பற்றியும் விவாதிக்கப்படவிருப்பதாக சொல்லப்படுகிறது. 
 

இதற்காக, நாடாளுமன்றத்திலுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும், தேசிய அரசியலில் பங்கெடுத்துக்கொண்ட முன்னாள் மூத்த தலைவர்களுடனும் தற்போது தேசம் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகளை எதிர்கொள்வது குறித்தும் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார் மோடி. 
 

அந்த வகையில் தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலிடனை தொடர்பு கொண்டு பேசிய மோடி, அதன் தொடர்ச்சியாக பாமக எம்.பி.யும் இளைஞரணி தலைவருமான டாக்டர் அன்புமணியிடம் பேசினார்.


அப்போது, அன்புமணி மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரின் உடல்நலம் பற்றி விசாரித்தார் மோடி. மருத்துவர் ராமதாஸின் உடல் நலனை நன்றாக கவனித்துக் கொள்ளும்படியும்  அறிவுறுத்தினார்.

 

anbumani ramadoss narendra modi



தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி,  இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கிய அவர், தனது அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரும்படியும் கேட்டுக் கொண்டார். 
 

அதைக் கேட்ட அன்புமணி, இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக துணிச்சலான நடவடிக்கைகளை அவர் எடுத்து வருவதாகவும், வலிமையான தலைமையின் கீழ் இந்தியா இயங்கி வருவதை  பிரதமரின் நடவடிக்கைகள் உணர்த்துவதாகவும் பாராட்டினார்.


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பா.ம.க. முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்திருக்கிறார் அன்புமணி. 
 

அதைக்கேட்ட பிரதமர் மோடி, "ஒரு மருத்துவர் என்கிற முறையில் அரசின் நடவடிக்கைகளை நீங்கள் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். கரோனா  விஷயத்தில் தனது அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான யோசனைகளை நீங்கள் சொல்லலாம்" என்றார். அதனை உற்சாகமாக ஏற்றுக் கொண்ட அன்புமணி, "பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனைகளை எழுத்து வடிவில் தங்களுக்கு  அனுப்பி வைக்கிறேன்" என உறுதியளித்திருக்கிறார்.
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.