
கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த எடப்பாடி தலைமையிலான அதிமுக, நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜகவுடன் இனி எப்போது கூட்டணி இல்லை என்று அறிவித்து தேர்தலை சந்தித்தது. தொடர்ந்து அதிமுகவினர், பாஜகவினருக்கு எதிராக விமர்சனங்களை வைத்தனர். அதனால் தமிழக பாஜக தலைவருக்கும்(அப்போதைய) அதிமுகவினருக்கும் தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் பாஜகவுடன் இனி கூட்டணியே இல்லை என்று தெரிவித்த அதிமுக தற்போது பாஜகவுடன் கூட்டணி என்று அறிவித்தது. இது அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் இந்த கூட்டணி அதிமுகவிற்கு தான் ஆபத்து என்று பகிரங்கமாக விமர்சிக்கத் தொடங்கினர்.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு பல கட்சிகள் வரும் என்று அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசிய அவர், “தமிழகத்தில் மிகப்பெரிய ஜாம்பவான் கட்சிகள் எல்லாம் நம்முடன் வரும் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னார். அவர் சொன்னது போன்று தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அப்படி அவர்கள் வந்துவிட்டால் நாமலாம் வேலை பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. அதிமுகவுடன் மிகப் பெரிய கட்சியான பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்கு வந்துவிட்டது. அதனால் இவர்களுக்கே ஓட்டு போடுவோம் என்று மக்கள் ஓட்டுப்போட்டுவிட்டு செல்வார்கள். அதனால் ஓரளவுக்குப் பணமும் மிச்சமாகும் என்று நினைக்கிறேன். அந்தளவிற்கு ஒரு அரசியல் சாணக்கியத்துடன் எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தி வருகிறார். நீங்கள் இருக்கும் அமாவாசை விரதம் எல்லாம் அவருக்கு சாதகமாகவே வரும். நிச்சயமாக 2026ல் அதிமுக கூட்டணியைத் தான் மக்கள் தேர்வு செய்வார்கள்”என்றார்.