Skip to main content

எங்க கட்சின்னா சொன்னாங்க? அவங்க யாருன்னு தெரியலியே? அவரு அமைச்சர், நான் எம்.எல்.ஏ... அதிமுகவில் நடந்த சம்பவம்! 

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும் சாத்தூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜவர்மனும் கீரியும் பாம்புமாகி ஒருவரை ஒருவர் வீழ்த்தவேண்டும் என்ற நோக்கத்தோடு காய் நகர்த்தி வருகிறார்கள் என்று பேச்சு கிளம்ப, சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு, அதனைச் செய்தி ஆக்கினார் பத்திரிகை ஒன்றில் நிருபராக உள்ள கார்த்தி. அந்த செய்தி வெளியான நிலையில்தான் சிவகாசியில் அவர் மீது கொடூரத் தாக்கல் நடத்தப்பட்டது.

 

incident



‘தாக்கியவர்களையும் அவர்களை ஏவியவர்களையும் கைது செய்ய வேண்டும். வன்முறைக் கும்பலை ஒடுக்க வேண்டும்’ என தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்க, அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, ஸ்டெல்லா பாண்டி, பூமுருகன் இருவரும் கைது செய்யப்பட்டனர். நான்கு வருடங்களுக்கு முன் சாத்தூரில் "நெற்றிக்கண்' என்ற பத்திரிகை நிருபரான கார்த்திகைச்செல்வன், சொந்தப் பகையினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதில் கூலிப்படையாக செயல்பட்டவன் ஸ்டெல்லா பாண்டி. அ.தி.மு.க.வின் இளைஞர் பாசறை கட்சியின் பாசறை நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளான். இவனது நண்பன்தான் பூமுருகன்.

போலீஸ் விசாரணையின்போது, "நாங்க ரெண்டு பேரும் கட்சிக்காக உசிரகூட கொடுப்போம். எங்க கட்சி, எங்க அமைச்சர், எங்க எம்.எல்.ஏ. இவங்களப் பத்தி தப்புத்தப்பா செய்தி போட்டா சும்மா இருக்க முடியுமா? செய்தியை வச்சி பிளாக்மெயில் பண்ணுனதா கட்சி மட்டத்துல பேசிக்கிட்டாங்க. ஏற்கனவே கடுப்புல இருந்த நாங்க, வாயிலேய வெட்டுனோம். கொல்லணும்கிற எண்ணமெல்லாம் எங்களுக்கு இல்ல''’என்று வாக்குமூலத்திலும் கட்சி விசுவாசத்தைக் காட்டியுள்ளார்களாம்.

விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை வட்டாரத்தில் கேட்டபோது, "பத்திரிகையாளர் மீதான தாக்குதல் என்பதால் மிகவும் கவனமாகவே செயல்படுகிறோம். புகார்தாரர் சொன்னதை அப்படியே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்திருக்கிறோம். கைதானவர்கள் இருவரும் யாருடைய தூண்டுதலிலும் செய்யலை'' என்றவர்கள் மேலும் சில தகவல்களைச் சொன்னார்கள்.


போலீஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம், "இதே நிருபர், இரண்டு வருடங்களுக்கு முன் வேறொரு வாரமிரு பத்திரிகையில் வேலை பார்த்தபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு, மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அமைச்சர் தரப்பிலிருந்து உதவி செய்திருக்காங்க. இப்ப வந்த செய்தி பற்றி அமைச்சர் பெருசா அலட்டிக்கலை. "பெரிய பெரிய தலைவர்களை நானும் மேடையில் கடுமையாக விமர்சிக்கத்தானே செய்கிறேன். என்னைப் பற்றி எந்தப் பத்திரிகைதான் எழுதவில்லை. எழுதுபவர்களையெல்லாம் அடிப்பது என்றால் எத்தனை பேரை அடிப்பது'ன்னு தன் பாணியில் சொல்லி வருத்தப்பட்டாராம்.

 

 

admk



அமைச்சருக்கு சாதிப் பின்புலம் என்பது கிடையாது. எல்லா சாதியிலும் தனக்கு விசுவாசமாக இருக்கக்கூடிய பலசாலிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டார். முரட்டு பக்தர்கள் என்று சொல்லக்கூடிய பெரும் கூட்டம், அமைச்சரின் பின்னால் இருக்கிறது. அவர்களை செல்லப்பிள்ளைகள் போல் வளர்த்து வருகிறார். அதனால், அமைச்சரின் ‘குட்புக்கில் இடம்பெற பலரும் முட்டி மோதுகிறார்கள். அந்தமாதிரி ஒரு எண்ணத்திலும்கூட, ஸ்டெல்லா பாண்டியும், பூமுருகனும் நிருபரைத் தாக்கியிருக்கலாம். ஆனா இதைக்கூட, கைதான இருவரும் ஒத்துக்கொள்ளவில்லை''’என்று சொல்லி முடித்தார்.


அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் பேசினோம். "அந்த ரெண்டுபேரும் எங்க கட்சின்னா சொன்னாங்க? அவங்க யாருன்னு தெரியலியே? பத்திரிகை நிருபரை அடிச்சதெல்லாம் கொடுமைங்க. வழக்கம்போல, இதை வச்சும் ஸ்டாலின் அரசியல் பண்ணுறாரு?''’என்றார்.

ராஜவர்மன் எம்.எல்.ஏ.வோ, "அவரு அமைச்சராவும், நான் இப்ப எம்.எல்.ஏ.வாவும் இருக்கிறோம்னா அதுக்குக் காரணம், எங்களுக்குள்ள இருக்கிற வலுவான நட்புதான். இல்லாத பிரச்சனையை ஆளாளுக்கு கிளப்பிவிடறாங்க'' என்றார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.