Skip to main content

ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு -  அகிலேஷ் யாதவ் உறுதி!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

akhilesh yadav

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல்  சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், விஜய யாத்திரை என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

 

இந்தநிலையில் நேற்று ஒரு பிரச்சார கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், உத்தரப்பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களுக்குள் அதை நடத்தி முடிப்போம். இதன்மூலம் தகுதியானோர் மக்கள் தொகையில் அவர்களின் பங்கிற்கு ஏற்ப உரிமைகளைப் பெற முடியும்".எனக் கூறியுள்ளார்.

 

மேலும் உத்தரப்பிரதேசத்தில் தனது கட்சித் தலைவர்களை குறி வைத்து நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை குறித்து பேசியுள்ள அகிலேஷ் யாதவ், "சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவை பாஜகவின் பிரிவுகளாகவே நடந்து கொள்கின்றன. மகாராஷ்ட்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் (தேர்தலின்போது) செயல்பட்ட அவர்கள் தற்போது உத்தரப்பிரதேசத்தில் செயல்பட்டு வருகிறார்கள். இருப்பினும் மற்ற மாநிலங்களில் தடுத்ததை போல உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் வரலாற்று தோல்வியை அவர்களால் தடுக்க முடியாது. பாஜகவின் இதுபோன்ற அனைத்து தந்திரங்களையும் சமாஜ்வாடி எதிர்கொள்ளும்" எனக் கூறியுள்ளார்.

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் ஏன் பயப்படுகிறார்?” - ராகுல் காந்தி கேள்வி

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Why is the Prime Minister afraid of conducting a caste wise census Rahul Gandhi Question

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று (05.02.2024) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “நாட்டில் பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் என்று இரண்டு சாதிகள் மட்டுமே இருப்பதாக பிரதமர் மோடி அடிக்கடி கூறி வந்தார். ஆனால் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றியபோது  தன்னை மிகப்பெரிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) என்று வர்ணித்தார்.

ஒருவரைச் சிறியவர், ஒருவரைப் பெரியவர் என்று கருதும் இந்த மனநிலையை மாற்ற வேண்டியது அவசியம். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினராக இருந்தாலும், அவர்களைக் கணக்கில் கொள்ளாமல் அவர்களுக்கு பொருளாதார மற்றும் சமூக நீதி வழங்க முடியாது. சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த பிரதமர் ஏன் பயப்படுகிறார்?” என கேள்வி எழுப்பியுள்ளார். 

Next Story

“தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை தொடங்குக...” - டிடிவி தினகரன்

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Start caste wise census work in Tamil Nadu TTV Dhinakaran

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “சமூகநீதியை பாதுகாக்கவும், கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை உடனடியாக தொடங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாட்டில் முதன்முறையாக பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் ஏற்கனவே இருந்த 50 சதவிகித இட ஒதுக்கீடு 65 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

பீகார் மாநிலத்தை தொடர்ந்து ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் அந்த பணிகள் முழுமையாக நிறைவடையும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்பதற்கும், அதற்கு சட்டரீதியாக எந்தவித தடையும் இல்லை என்பதற்கும் பீகார் தொடங்கி ஆந்திரா வரையிலான பல்வேறு மாநிலங்கள் உதாரணமாக இருக்கும் நிலையில் தமிழகம் மட்டும் மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருப்பது ஏன்.

பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், தமிழகத்தில் அமலில் இருக்கும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பாதுகாக்கவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களை முன்னேற்றுவதற்கான சமூகநீதி நடவடிக்கையான இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை உடனடியாக தொடங்கிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.