Skip to main content

75வது குடியரசு தின விழா; மத்திய அரசின் புதிய முன்னெடுப்பு

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

upcoming republic day parade women participate only 

 

ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் (ஜனவரி 25) மாலை நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ஆற்றும் உரையுடன் குடியரசு தின விழாவானது தொடங்கும். அதனை தொடர்ந்து ஜனவரி 26 ஆம் நாள் காலை குடியரசுத் தலைவர் டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவார்.

 

இவ்விழாவின் ஒரு பகுதியாக நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் மற்றும் ராணுவ பலத்தை பறைசாற்றும் பாதுகாப்பு வீரர்கள் அணிவகுப்புகள் ஆகியவை நடைபெறும். இதில் பிரதமர், அமைச்சர்கள், அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வர். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது.

 

இந்நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி இந்தியாவின் 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் இந்தியாவின் இந்த குடியரசு தினமானது வைர விழாவாகக் கொண்டாடப்படும் வேளையில் இந்த விழாவில் இடம்பெறும் அணிவகுப்பு முழுவதும் பெண்களைக் கொண்டே நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சக பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வரும் குடியரசு தின அணிவகுப்பு, ராணுவ இசைக்குழு, அலங்கார ஊர்தி அணிவகுப்பு என அனைத்து நிகழ்வுகளும் பெண் அதிகாரிகள் தலைமையில் முழுக்க முழுக்க பெண்களைக் கொண்டே நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

 

மேலும், 2024 ஆம் ஆண்டிற்கான குடியரசு தின விழா அணிவகுப்பு திட்டமிடல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் முப்படைகளுக்கும் பல்வேறு துறை அமைச்சகங்களுக்கும் கடந்த மார்ச் மாதம் அனுப்பிய கடிதத்தில் குடியரசு தின அணிவகுப்பு முழுவதும் பெண்களைக் கொண்டே நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்