Skip to main content

'75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டாம்' - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!

Published on 01/02/2021 | Edited on 01/02/2021

 

UNION BUDGET INCOME TAX RELAXATION FOR SENIOR CITIZENS

 

2021- 2022 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "நடப்பாண்டில் ரூபாய் 1.72 லட்சம் கோடி மதிப்பில் விவசாய விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படும். அரசின் தானியக் கொள்முதல் மூலம் ஓராண்டில் ஒன்றரை கோடி கூடுதல் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். வேளாண் பொருட்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்படும். ரூபாய் 16.5 லட்சம் கோடிக்கு விவசாயக் கடன்கள் தர நடப்பாண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா அமைக்கப்படும். தமிழகத்தில் கடல் பாசியைப் பதப்படுத்தப் புதிய வசதி ஏற்படுத்தப்படும். சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிக்காக ரூபாய் 15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 

100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும்; 15,000 பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்படும். பொருளாதார நடவடிக்கையாக சென்னை உட்பட 5 முக்கிய மீன்படி துறைமுகங்கள் விரிவுபடுத்தப்படும். தேசிய மொழிகளை மொழிபெயர்க்க புதிய திட்டம் உருவாக்கப்படும். அரசின் அறிவிப்புகள், திட்டங்கள் அனைத்தும் தேசிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்படும். லடாக்கின் லே பகுதியில் புதிய மத்திய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். சாலையோர வியாபாரிகளுக்கும் சமூக பாதுகாப்பு திட்டம் விரிவுபடுத்தப்படும். மின்னணு பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க ரூபாய் 1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்தின் கீழ் நான்கு இந்திய வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்படும். 

 

நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூபாய் 3,768 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 9.50% உயரும் எனக் கணித்துள்ளோம். அடுத்த நிதியாண்டில் அரசின் செலவுகள் ரூபாய் 34.85 லட்சம் கோடியாக உயரும். சந்தைகளில் இருந்து ரூபாய் 12 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 6.8% ஆக குறையும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டுக்கு ரூபாய் 1,500 கோடியும், சூரிய ஆற்றல் கழகத்திற்கு ரூபாய் 1,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் பொருட்களைச் சந்தைப்படுத்தும் E-NAM திட்டத்தில் 1.68 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இதுவரை இல்லாத அளவாக 6.48 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். 75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை. ஓய்வூதியம், வட்டி ஆகியவற்றை மட்டுமே நம்பியிருந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம். சிறிய அளவிலான வருமான வரி சச்சரவுகளைத் தீர்த்து வைக்கப் புதிய குழு அமைக்கப்படும். வெளிநாடுவாழ் இந்தியர் தாயகம் திரும்பும்போது இரட்டைவரி விதிப்புக்கு ஆளாவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பங்கு ஈவுத்தொகை (டிவிடெண்ட்) வருமானத்துக்கு முன்கூட்டியே வரி செலுத்த தேவையில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே, பட்ஜெட் உரையின் போது, மத்திய நிதியமைச்சர், 'இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு' என்று திருக்குறளை மேற்கோள் காட்டினார். அதேபோல், 'பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து' என்ற குறளையும் மேற்கோள் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது தி.மு.க. பரபரப்பு புகார்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
DMK on Minister Nirmala Sitharaman Sensational complaint

பா.ஜ.க. சார்பில் கோவையில் நேற்று (18.03.2024) நடைபெற்ற பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்தார். இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தை விதி மீறலாக கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குறித்து கண்டனங்கள் எழுந்தன.

தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், பிரதமர் மோடி கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளிலேயே பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதே சமயம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் பிரதமரின் கோவை வாகனப் பேரணியில் 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றது தொடர்பாக பா.ஜ.க.வுக்கு எதிராக இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் அளித்துள்ளது. மேலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதற்காகவும் நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோயில்களை தி.மு.க. அழிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவதூறு பரப்பி, வெறுப்பைத் தூண்டும் விதமாகப் பேசுகிறார். உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி தி.மு.க.வின் மீது அவதூறுகளைப் பரப்பியதாக நிர்மலா சீதாராமன் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார் அளித்துள்ளார்.

DMK on Minister Nirmala Sitharaman Sensational complaint

அந்தப் புகாரில், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 16.03.2024 அன்று மாலை 05.30 மணிக்கு யூடியூப் சேனல் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் பொதுமக்களிடம் உரையாற்றினார். அந்த உரை சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது நிர்மலா சீதாராமன் தனது உரையின் போது திராவிட முன்னேற்றக் கழகம் பற்றிய உண்மைகளைத் திரித்து விமர்சித்தார். அதாவது, ‘நமது கோயிலையே அழிக்கக் கூடிய, நமது கோயிலையே சுரண்டித் தின்னக் கூடிய, நமது மதத்தையே அழிப்பேன் என்று சொல்லக்கூடிய கட்சிக்கெல்லாம் ஏன் ஓட்டு போடுறீங்க’ எனப் பேசியுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.