Skip to main content

கடும் எதிர்ப்பை மீறி உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்!

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
uniform Civil code passed in Uttarkhand despite strong opposition!

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலே விவாதிக்கப்பட்டு வரும் சட்டம், பொது சிவில் சட்டமாகும். இந்த சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பும், ஒரு தரப்பினரின் ஆதரவும் நிலவி வருகிறது. இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மையினர், பொது சிவில் சட்டத்தை தங்களது உரிமைகளைப் பறிக்கும் ஒன்றாகவே கருதுகிறார்கள். இந்த பொது சிவில் சட்டத்தை திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, குழந்தைகளைத் தத்தெடுப்பது உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப இயற்றப்பட்டிருக்கிறது. நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதி அளித்து வந்த பாஜக, இன்று பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. இதனையொட்டி பாஜக அரசு, பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சியெடுக்கும் என்றே கருதப்படுகிறது.

அந்த வகையில் உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா இன்று (06-02-24) தாக்கல் செய்யப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மீண்டும் மாநில முதல்வராகப் பொறுப்பேற்ற போது மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, 2 ஆண்டுகளுக்கு முன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பொது சிவில் சட்ட மசோதாவை தயாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 5 பேர் கொண்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்த குழுவினர், பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வரைவு மசோதாவை தயார் செய்து முதல்வரிடம் அறிக்கையாகத் தாக்கல் செய்தனர். இந்த வரைவு மசோதாவுக்கு மாநில அமைச்சரவை கடந்த 4 ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.

இதனையடுத்து, இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக கடந்த 5 ஆம் தேதி உத்தரகாண்ட் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் கூடியது. இதையடுத்து, பொது சிவில் சட்ட மசோதாவை உத்தரகாண்ட் சட்டசபையில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று (06-02-24) தாக்கல் செய்தார். இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், உத்தரகாண்ட் சட்டசபை வளாகப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், வளாகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டும் இந்த பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மேலும், மசோதா மீது உத்தரகாண்ட் சட்டசபையில் விவாதம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், 3 நாள் விவாதத்துக்குப் பின் கடும் எதிர்ப்பையும் மீறி ஆளும் பா.ஜ.க அரசு உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்ட மசோதா இன்று (07-02-24) நிறைவேற்றியது. இதன் மூலம், இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த உள்ள முதல் மாநிலம் உத்தரகாண்ட் மாநிலம் ஆகும். உத்தரகாண்ட் மாநிலத்தை தொடர்ந்து, பா.ஜ.க ஆளும் அசாம், குஜராத் மாநிலங்களும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சார்ந்த செய்திகள்