Skip to main content

 உத்தரகாண்டில் நிலச்சரிவு; சிக்கி தவிக்கும் தமிழர்கள்!

Published on 14/09/2024 | Edited on 14/09/2024
Trapped Tamil people Landslide in Uttarakhand

உத்தராகண்ட் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு தமிழகத்தில் இருந்து சில பேர் புனித பயணம் மேற்கொண்டனர். இதற்கிடையில், தவாகாட் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், புனித பயணம் மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மலை பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவிக்கின்றனர். 

மலைப் பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் 30 பேரை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், அவர்கள் 30 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கியுள்ள கடலூரைச் சேர்ந்த 30 பேரையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவிக்கையில், ‘உத்தரகாண்ட் நிலச்சரிவு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக உள்ளனர். தமிழர்கள் 30 பேருக்கும் தேவையான உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சமூக நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், “நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் தமிழர்களை மீட்க உத்தராகண்ட் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்