Skip to main content

பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - மேற்குவங்கத்தில் எகிறும் எதிர்பார்ப்பு!

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

bjp general secretary

                                            பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங்

 

மேற்கு வங்கத்தில் வருகிற மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே பரபரப்பாக இருந்துவந்த தேர்தல் களம், தேர்தல் தேதி அறிவிப்பிற்குப் பிறகு சூடு பிடித்துள்ளது.

 

இந்தநிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை நேற்று (05.03.2021) வெளியிட்டார். அப்போது அவர், தான் நந்திகிராமில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். இந்த தொகுதி, சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு மாறிய முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியின் தொகுதியாகும். சுவேந்து அதிகாரி, அந்த தொகுதியின் முகம் எனக் கூறப்படும் அளவிற்கு நந்திகிராமில் செல்வாக்கு உள்ளவர். ‘நந்திகிராமில் நின்று பாருங்கள்’ என பாஜக விடுத்த சவாலை ஏற்று, மம்தா அங்கு களமிறங்குகிறார்.

 

ஏற்கனவே, ‘நந்திகிராமில் மம்தாவை 50 லட்சம் வாக்குகளில் தோற்கடிப்பேன் அல்லது அரசியலை விட்டு விலகுவேன்’ என்று அறிவித்திருந்த சுவேந்து அதிகாரி, மம்தா அங்கு போட்டியிடுவதாக அறிவித்ததும், மண்ணின் மைந்தனுக்கே மக்கள் ஆதரவு தெரிவிப்பர் என்றும், மம்தா தோல்வியடைவார் என்றும் தெரிவித்தார்.

 

இந்தநிலையில், மம்தாவை எதிர்த்து நந்திகிராமில் சுவேந்து அதிகாரி போட்டியிடுவார் என பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து, யார் அந்த தொகுதியில் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு இப்போதிலிருந்தே எகிறத் தொடங்கியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்