
அலகாபாத் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த யஷ்வந்த் வர்மா, சில மாதங்களுக்கு முன்பு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன்படி, அவர் சில மாதங்களாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், ஹோலி பண்டிகையை கொண்டுவதற்காக சில நாள்களுக்கு முன்பு நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது குடும்பத்தோடு தனது சொந்த ஊரான உத்தரப் பிரதேசத்திற்கு சென்றிருந்தார். இதற்கிடையில், டெல்லியில் யஷ்வந்த வர்மா குடியிருந்த வீட்டில் திடீரென்று தீப்பிடித்தது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், நீதிபதி வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தீயை முழுமையாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அப்போது, நீதிபதி யஷ்வந்த வர்மா வீட்டை ஆய்வு செய்த போது, அங்கு கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. மேலும், சில பணக்கட்டுக்கள் தீயில் கருகி சாம்பலாகின. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும் உச்சநீதிமன்ற நீதிபதியான சஞ்சீவ் கண்ணாவுக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற நீதிபதி, ஜொலிஜியம் உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்தார்.
அந்த ஆலோசனையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் நீதிமன்றத்துக்கே திருப்பி பணியிட மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வராத சூழ்நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்த விவகாரம் குறித்து நீதிபதி யஷ்வந்த் வர்மா எந்தவித பதிலும் அளிக்கவில்லை.