Skip to main content

மைசூரு மன்னருக்கு சொந்த வீடு கூட இல்லையா?; வெளியான சொத்து மதிப்பு!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Released property value on Filing of nomination The King of Mysore didn't even have his own house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், 28 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதில், கர்நாடகா பா.ஜ.க - ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி, யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடவுள்ளது. 

அதன்படி, முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி தொடங்கியது. இதில், 28 தொகுதிக்களுக்கான வேட்புமனுவை வேட்பாளர்கள் தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மன்னர் யதுவீர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனக்கு சொந்த வீடு, விவசாய நிலம், கார் இல்லை என தெரிவித்துள்ளார். 

கர்நாடகா மாநிலம், மைசூரில் உள்ள குடகு மக்களவைத் தொகுதியில் மைசூர் மன்னர் யதுவீர், பா.ஜ.க சார்பில் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால், மைசூர் மன்னர் யதுவீர், மைசூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று, டம்மி வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார். 

அதில், மன்னர் யதுவீரின் சொத்து மதிப்பு ரூ.4 கோடியே, 99 லட்சத்து 59 ஆயிரத்து 303 என குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னிடம் கையிருப்பாக ரூ.1 லட்சம் உள்ளது என்றும் தனது பெயரில் உள்ள வங்கிக் கணக்குகளில் ரூ.23 லட்சத்து 55 ஆயிரம் இருப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். ரூ. 1 கோடி மதிப்பிலான பங்குகள், நிறுவனங்களின் பத்திரங்கள் இருப்பதாக மன்னர் யதுவீர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், தன்னிடம் 4 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பதாகவும், அவரது மனைவி பெயரில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் செய்த வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மன்னர் யதுவீருக்கு சொந்தமாக வீடு, விவசாய நிலம், கார், வணிக கட்டிடங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்