Skip to main content

மாநிலங்களவைத் தேர்தல்- எத்தனை இடங்களை கைப்பற்றியது பா.ஜ.க., காங்கிரஸ்!? 

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

rajya sabha election- How many seats did BJP and Congress win?

 

மாநிலங்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பா.ஜ.க. மூன்று இடங்களிலும், ராஜஸ்தானில் காங்கிரஸ் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனா- காங்கிரஸ் கூட்டணி மற்றும் பா.ஜ.க. கூட்டணி தலா மூன்று இடங்களில் வென்றுள்ளனர். 

 

நான்கு மாநிலங்களில் உள்ள 16 மாநிலங்களவை இடங்களுக்கு நேற்று (10/06/2022) தேர்தல் நடைபெற்றது. இதில், கர்நாடகாவில் தேர்தல் நடந்த நான்கு இடங்களில் மூன்று இடங்களில் ஆளும் பா.ஜ.க.வும், ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சியும் வென்றது. இதில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூன்று பேர் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் வெற்றி பெற்றார். 

 

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் ரந்தீப் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி ஆகிய மூன்று பேரும் வெற்றி பெற்றனர். பா.ஜ.க.வின் கன்ஷ்யாம் திவாரியும் வெற்றி பெற்றார். ஆனால் பா.ஜ.க. ஆதரவுடன் சுயேச்சையாகக் களமிறங்கிய சுபாஷ் சந்திரா தோல்வி அடைந்தார். 

 

மகாராஷ்டிராவிலும், ஹரியானாவிலும் விதிமீறல் புகார் காரணமாக வாக்கு எண்ணிக்கை தாமதமாக நடைபெற்றது. இதில், ஹரியானாவில் பா.ஜ.க. வேட்பாளர் கிருஷ்ணன்லால் பன்வரும், பா.ஜ.க. ஆதரவுப் பெற்ற சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மாவும் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அஜய் மக்கான் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கட்சி மாறி வாக்களித்ததும், ஒரு வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டதும், அக்கட்சியின் வேட்பாளர் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. 

 

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா- காங்கிரஸ் கூட்டணியின் மூன்று வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும், அதன் நான்காவது வேட்பாளர் தோல்வி அடைந்தார். பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அனில் பாண்டே, சஞ்சய் தனஞ்செய் ஆகியோர் வெற்றி பெற்றனர். சிவசேனா சார்பில் போட்டியிட்ட சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரபுல் படேல், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட இம்ரான் பிரதாப்கடி ஆகியோர் வெற்றி பெற்றனர். 

  

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.