
ராஜ்கோட்டில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
டெல்லியில் இருந்து காணொளி கட்சி மூலம் குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி, மத்திய, மாநில அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள காந்தேரி கிராமத்தில், 201 ஏக்கர் பரப்பளவில், ரூபாய் 1,195 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனையின் 9 கட்டடங்களின் வரைபடங்களுக்குத் தற்காலிக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் போது பரப்பப்படும் வதந்திகளை நம்பாதீர். சமூக வலைதள தகவலை உறுதிச் செய்யாமல் மற்றவருக்கு அனுப்ப வேண்டாம். கண்ணுக்கு தெரியாத எதிரியான கரோனாவை நாட்டு மக்கள் எதிர்த்துப் போராட வேண்டும். தனிப்பட்ட ஆதாயத்துக்காக சிலர் வெளியிடும் வதந்திகள் நம் நாட்டில் வேகமாகப் பரவுகிறது" என்றார்.