
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவ மாணவிகளுக்கு டியூசன் நடத்திவருகிறார். இந்த டியூசனில் பல மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், டியூசன் ஆசிரியர் தன்னிடம் படிக்கும் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் ஆசிரியர் பாலியல் தொலை கொடுத்துள்ளார். இதனால் கடும் மன வேதனைக்கு உள்ளான மாணவி டியூசனுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இது குறித்துப் பெற்றோர்கள் கேட்டதற்கு மாணவி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் அந்த பகுதி வாசிகள் டியூசன் ஆசிரியரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்பு அவரது ஆடைகளைக் கிழித்து அரைநிர்வாணத்துடன் ஊர்வலமாக நடக்கவைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆசிரியரைக் கைது செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.
இந்த ஆசிரியரால் வேறு சில மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.