17-வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது. அப்போது புதியதாக தேர்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்கு இடைக்கால மக்களவை சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்வு இரண்டு நாட்கள் நடைபெற்ற நிலையில், மூன்றாவது நாளான இன்று சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. அதில் பாஜக சார்பில் சபாநாயகர் பதவிக்கு நிறுத்தப்பட்ட வேட்பாளர் ஓம் பிர்லா திமுக, அதிமுக, பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
![PM DELIGHTS](http://image.nakkheeran.in/cdn/farfuture/kArgRyTvfd6juLpBUJ7AIoVJ8-yiB_awD0VyTiu7eck/1560946767/sites/default/files/inline-images/802585-bjp-cec-meeting-pti.jpg)
அதனைத் தொடர்ந்து இன்று மாலை அனைத்து கட்சித்தலைவர்களின் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இந்த கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து கட்சித்தலைவர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். இந்த கூட்டத்தை மாயாவதி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் புறக்கணித்துள்ளனர். டெல்லி அசோகா ஹோட்டலில் நாளை இரவு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி விருந்தளிக்க உள்ளார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.