Skip to main content

தேசம் என வரும்போது கருத்தியல் வேறுபாடுகளுக்கு இடமில்லை! - பிரதமர் மோடி உரை!

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

modi

 

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், சர் சையத் அஹமத்கானால் கல்லூரியாக தொடங்கப்பட்டு, 1920 ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாக மாறியது. இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, நடைபெற்ற நூற்றாண்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றியதோடு, பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா சிறப்புத் தபால் தலையை வெளியிட்டார்.


அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக விழாவில், 1964க்கு பிறகு ஒரு பிரதமர் கலந்துகொள்ளவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழத்தில் மோடி ஆற்றிய உரை :


"அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழத்தின் நிறுவனர் சர் சையத், நாட்டின் வளர்ச்சி, மக்களின் சாதி மற்றும் மதத்திற்கு மேலானது என்று கூறியுள்ளார். அதற்கு அவர் ஒரு உதாரணத்தையும் கொடுத்தார், உடல் ஆரோக்கியமாக இருக்க, ஒவ்வொரு உடல் பகுதியும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று கூறினார். யாருடைய பின்தங்கிய நிலைக்கும் மதம் காரணமாக இருக்கக்கூடாது என்றும் சர் சையத் கூறியுள்ளார்.  இந்தியா, தன் குடிமக்கள் யாரும் மதத்தால் பின்தங்காத, அனைவருக்கும் தங்கள் இலட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள சம வாய்ப்பு கிடைக்கிற பாதையில் பயணித்து வருகிறது.

 

நாம் எந்த மதத்தில் பிறந்தாலும், நமது இலட்சியங்ளை, நாட்டின் இலக்குகளோடு  எவ்வாறு இணைத்துக் கொள்ளவது என்பதைப் பார்ப்பது முக்கியம். சமுதாயத்தில் கருத்தியல் பிளவுகள் இருக்கக்கூடும், ஆனால் நாட்டின் வளர்ச்சி என  வரும்போது, மற்ற அனைத்தும் இரண்டாம்பட்சம்தான். அது தேசம் என  வரும்போது, கருத்தியல் வேறுபாடுகள் குறித்த கேள்விக்கே இடமில்லை. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் பல சுதந்திரப் போராளிகளை உருவாக்கியதால் இதை இங்கே சொல்வது தர்க்கரீதியானது. அவர்களுக்கு அவர்களின் கருத்தியல் வேறுபாடுகள் இருந்தன. ஆனால், அவர்கள் அதைச் சுதந்திரத்திற்காக ஒதுக்கி வைத்தனர். சுதந்திரம் அவர்களை ஒன்றிணைத்ததைப் போலவே, நாமும் சுயசார்பு இந்தியாவிற்காக உழைக்க வேண்டும்.

 

நாட்டின் முன்னேற்றத்தை ஒரு அரசியல் கண்ணாடி மூலம் பார்க்கக்கூடாது. சுயசார்பு இந்தியா என்ற இலக்கை நாம் ஒன்றிணைக்கும்போது, சில சக்திகள் எதிர்மறையை ஊட்டிவிடும். ஆனால், நமது எண்ணங்கள் ஒரு புதிய இந்தியாவில் முதன்மையாகக் கவனம் செலுத்தும்போது, அத்தகைய சக்திகளின் இடம் குறைந்துவிடும். அரசியலும் சமூகமும் காத்திருக்க முடியும், ஆனால் நாட்டின் வளர்ச்சி காத்திருக்க முடியாது. கடந்த நூற்றாண்டில், வேற்றுமைகளால் நிறையநேரம் இழக்கப்பட்டுவிட்டது. இனி இழக்க அதிக நேரம் இல்லை".


இவ்வாறு பிரதமர் மோடி, அலிகார் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றினார். இந்த நிகழ்வில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்கிரியாலும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்