Skip to main content

மாணவியின் கணக்கில் இருந்து பணம் திருட்டு; பேடிஎம் நிறுவனம் வழங்கக்கோரி நீதிமன்றம் உத்தரவு

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

paytm app money issue high court three lakhs fine 

 

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவ படிப்பு படித்து வரும் மாணவி பவித்ரா. இவர் சென்னை அமைந்தகரையில் உள்ள வங்கியில் கணக்கு ஒன்றை வைத்திருந்தார். அந்த வங்கி கணக்கின் மூலம் பேடிஎம் இணைய வங்கிக் கணக்கை தொடங்கியிருந்தார்.

 

இந்த நிலையில் அந்த வங்கிக் கணக்கில் இருந்து கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றியதற்காக வழங்கப்பட்ட சம்பளமான மூன்று லட்சம் ரூபாயானது கடந்த 2021-ஆம் ஆண்டு பல்வேறு பரிவர்த்தனை மூலமாக  மர்ம நபர்களால் திருடப்பட்டது. தனது வங்கிக் கணக்கில் இருந்த பணம் காணாமல் போனது குறித்து வங்கி நிர்வாகத்திடம் பவித்ரா புகார் செய்தார். ஆனால் வங்கி நிர்வாகமோ உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காதததுடன் திருடு போன பணத்தையும்  திருப்பித் தர மறுத்துவிட்டது.

 

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பவித்ரா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்து வந்தார். அப்போது வங்கிக் கணக்கில் இருந்து இந்த பணம் திருடப்படவில்லை என்றும் 'பேடிஎம்' கணக்கு வாயிலாக இந்த பணம் எடுக்கப்பட்டுள்ளதாக வங்கித் தரப்பில் இருந்து விளக்கம் தரப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேடிஎம் நிர்வாகம் தரப்பில் இந்த திருட்டுக்கு பொறுப்பு ஏற்க முடியாது என தெரிவித்துள்ளனர். மேலும் பேடிஎம் மூலம் பண பரிவர்த்தனை தொடர்பாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. தங்கள் நிறுவனத்தின் மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனை பாதுகாப்பானது என்று வாதிடப்பட்டது. அதனை தொடர்ந்து மனுதாரர் பவித்ரா சார்பில் வங்கிக் கணக்கில் இருந்த பணமானது பல தவணையாக மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த உத்தம் குமார், உத்தரபிரதேசத்தை சேர்ந்த பல்ராம் குமார் ஆகியோரின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

 

அனைத்து தரப்புகளின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா இணைய வழியாக செயல்படும் வங்கிகள்  மின்னணு பண பரிவர்த்தனைகள் செய்யும்படி பொதுமக்களை ஊக்குவிக்கின்றனர். அதேநேரம் அதில் ஏதாவது மோசடி நடந்தால் அதற்கு பொறுப்பு ஏற்க எந்த நிறுவனமும் முன்வருவதில்லை. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கவும் செய்கின்றனர். இந்த வழக்கில் பேடிஎம் கணக்கு மூலம் தான் மனுதாரர் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதால் எனவே மனுதாரருக்கு 2 வாரங்களுக்குள் அந்த பணத்தை கொடுக்க பேடிஎம் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்