
கணவன் தற்கொலை செய்து கொண்டிருந்த காட்சியை இன்ஸ்டாகிராம் லைவ்வில் மனைவி பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவ் பிரகாஷ் திர்பாதி (26). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரியா ஷர்மா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தொடக்க காலத்தில் இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. இதற்கிடையில், பிரியா ஷர்மாவுக்கு வேறு ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனை அறிந்த திரிபாதியும், திருமண வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அதை ரகசியமாக வைத்துள்ளார். இதற்கிடையில், திரிபாதி ஒரு விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் போயுள்ளது. இந்த நேரத்தில், பிரியா ஷர்மா தனது குழந்தைகளை அழைத்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். தனது மனைவியை சமாதானம் செய்ய திரிபாதி, பலமுறை மனைவியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால் பிரியா ஷர்மா வர மறுத்து, கணவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று, மனைவியை சமரசம் செய்ய திரிபாதி மீண்டும் முயற்சி செய்துள்ளார். ஆனால், மறுபடியும் திரிபாதியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த திரிபாதி தனது வீட்டிற்கு வந்து கதவை உள்பக்கமாக பூட்டியுள்ளார். அதன் பின்னர், சமூக வலைத்தளப் பக்கமான இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ போட்டு திரிபாதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த லைவ் வீடியோவை, 44 நிமிடங்கள் வரை பார்த்த பிரியா ஷர்மா, கணவரை காப்பாற்ற எந்தவித உதவியும் செய்ய முன்வரவில்லை.
இதனையடுத்து, இந்த வீடியோவை பார்த்த திரிபாதியின் குடும்பத்தினர், இச்சம்பவம் குறித்து போலீசிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், குடும்ப வன்முறை காரணமாகவே இந்த தற்கொலை நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பிரியா ஷர்மாவையும், அவரது தாயாரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.