Skip to main content

புதிய விதிமுறையால் ஓட்டுநர் உரிமமும், வாகன பதிவு சான்றிதழும் செல்லாது...?

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

அக்டோபர் 1-ம் தேதி முதல்  ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு இரண்டிலும் புதிய விதிமுறையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

licence

 

சமீபத்தில் மோட்டார் வாகன விதிமுறை 1989-ல் கொண்டுவரப்பட்ட புதிய வாகன விதிமுறைகளின் அடிப்படையில் வாகனம் தொடர்பான ஆவணங்கள் எல்லாம் மின்னணு வடிவத்தில் மாற்றுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு இரண்டும் ஒரே மாதிரியாக இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விரண்டுமே பிளாஸ்டிக் அட்டையில் இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த அட்டைகளில் QR code கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஓட்டுனர் அல்லது வாகன உரிமையாளர் குறித்த முழுத் தகவல்களும் இடம்பெற்றிருக்கும். இதில் 10 ஆண்டுகள் வரையிலான ஓட்டுநர் அல்லது வாகன உரிமையாளரின் அபராதங்கள் உள்ளிட்ட முழு வரலாறும் தெரியவரும்.
 

இதன் மூலம் வாகனம் மற்றும் வாகன ஓட்டியின் ஒட்டுமொத்த விவரங்களையும் ஒரே அட்டையில் அறியக்கூடிய வசதி ஏற்படும். அதேசமயம் அக்டோபர் 1-ம் தேதிக்கு பிறகு தற்போது நடைமுறையில் இருக்கும் ஓட்டுநர் உரிமமும், வாகன பதிவு சான்றிதழும்  செல்லுமா அல்லது செல்லாதா என்பதை குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.  

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குன்னூர் பேருந்து விபத்து; ஆர்டிஓ அதிரடி நடவடிக்கை

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

Coonoor bus incident RTO action

 

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பர்லியாறு என்ற இடத்திற்கு அருகே சுற்றுலா பேருந்து ஒன்று கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி (30-9-2023) மாலை 6 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திலிருந்து புறப்பட்டு உதகமண்டலத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று தென்காசிக்குத் திரும்பிச் செல்வதற்காகப் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

 

இதனையடுத்து இந்த விபத்து தொடர்பாக 4 பேர் மீது 3 பிரிவின் கீழ் குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதன்படி பேருந்து உரிமையாளர் சுப்பிரமணி (வயது 65), ஓட்டுநர்கள் முத்துக்குட்டி (வயது 65), கோபால் (வயது 32) மற்றும் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் (வயது 64) ஆகியோர் மீது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட சட்டப்பிரிவு 279, 337, 304 (A) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், இந்த விபத்து குறித்து காவல் துறையினருடன் இணைந்து உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர். தியாகராஜன் விசாரணை மேற்கொண்டு வந்தாரர். இந்த விசாரணையில் பேருந்தின் ஓட்டுநர் முத்துக்குட்டி பேருந்தை அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாக இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஓட்டுநர் முத்துக்குட்டியின் ஓட்டுநர் உரிமத்தை 18.10.2023 முதல் 17.10.2033 வரை என 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர். தியாகராஜன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். 

 

 

 

Next Story

டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

DTF Vasan's driving license suspended for 10 years

 

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் டி.டி.எஃப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி (17.9.2023) சென்று கொண்டிருந்தார். அப்போது தனது வாகனத்தில் முன் சக்கரத்தைத் தூக்கி சாகசம் செய்ய முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டார். இதில் காயமடைந்த அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

 

இதனைத் தொடர்ந்து டி.டி.எஃப் வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி செம்மல் முன்பு விசாரணைக்கு வந்தபோது, டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து டி.டி.எஃப். வாசனின் நீதிமன்றக் காவல் 3 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அக்டோபர் 16 ஆம் தேதி வரை நீட்டித்து மேலும் 15 நாட்களுக்கு அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டு இருந்தார். இதற்கிடையில் டி.டி.எப்.வாசன் ஜாமீன் மனுவை காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் 2 முறை நிராகரித்திருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 

 

இந்த நிலையில், டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் 2033ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.