
மும்பையில் 21 வயது இளைஞன் ஒருவன் 18 வயது நிரம்பிய தனது நண்பனை தன்னிடம் எப்பொழுதும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்ததாலும், தனக்கு கல்வியறிவு குறைவு என்று அடிக்கடி சுட்டிக்காட்டிக்கொண்டிருந்ததாலும் 54முறை தொண்டையில் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகமது அமீர் அப்துல் வாஹித் ரஹீன் வயது 21, முகமது அபிராஸ் ஆலம் ஷேக் வயது 18 இருவரும் நண்பர்கள். வாஹித் ரஹீன் படிக்காததால் முகமது அபிராஸ் அவனிடம் எப்பொழுதும் ஆங்கிலத்தில் பேசுவதும், படிக்காதவன் என்று கேலி செய்வதுமாகவே இருந்துள்ளான். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத வாஹித் ரஹீன்,கடந்த புதன்கிழமை வாஹித் ரஹீன்,அபிராஸை வற்புறுத்திக் குடிக்க அழைத்துள்ளான். இருவரும் குடித்துள்ளனர், அபிராஸ் கழிவறைக்கு சென்றபொழுது பின்தொடர்ந்து சென்ற ரஹீன் தன்னிடமிருந்த கத்தியைக்கொண்டு அபிராஸின் தொண்டையில் குத்தியுள்ளான். பிறகு இறந்துவிட்டானா என்பதை உறுதி செய்ய 54 முறை தொண்டையில் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளான் ரஹீன் .
கொலைசெய்தவுடன், ரஹீன் தானாக ஷாகு நகர் காவல்நிலையத்திற்கு சென்று அபிராஸை தான் கொலைசெய்துவிட்டதாக கூறி சரணடைந்துள்ளான். மேலும் அவன் உடல் இருக்கும் இடத்திற்கு அழைத்துசென்று காண்பித்துள்ளான். போலீசார் இரவு ஒரு மணியளவில் அபிராஸ் உடலை ரஹேஜா பாலத்தின் அடியில் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை மேல் அதிகாரி கூறியது, "ரஹீனை, அபிராஸ் படிக்காதவன் என்று கேலி செய்துவந்துள்ளான். அதனால் கோபமடைந்த ரஹீன் அவனை பழிவாங்க ஒருவாரமாக திட்டமிட்டுள்ளான், சமயம் வந்ததும் அபிராஸை கொன்றுள்ளான்".