Skip to main content

இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு?; “காங்கிரஸுக்கு ஒரு சீட் கூட கொடுக்க மாட்டேன்” - மம்தா அதிரடி

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Mamata banerjee says I will not give even one seat to Congress

இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தனர்.

இதற்கிடையே, நான்கு கட்டங்களாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ஆம் ஆத்மி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸின் 5 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கூட்டணிக் குழு தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வந்தது. அதில், நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார். 

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் கடந்த 24 ஆம் தேதி அறிவித்தது. இது குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை. இங்கு பா.ஜ.க.வை தனித்து நின்று தோற்கடிப்போம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளது” என்று தெரிவித்தார். அதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், இந்தியா கூட்டணியில் இருந்து விலகி, கடந்த 28ஆம் தேதி காலை தனது பதவியை ராஜினாமா செய்து, மாலையில் பா.ஜ.க ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். மேலும், அவருடன் எட்டு பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். மூன்று மாநில முதலமைச்சர்களின் இந்த திடீர் அறிவிப்பு இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்பட்டது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி முறிவு குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மம்தா பானர்ஜி, “மேற்கு வங்கத்தில் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு 2 எம்.பி சீட் கொடுக்க தயாராக இருந்தேன். அந்த 2 தொகுதியிலும் அவர்களை வெற்றிப் பெறச் செய்யவும் தயாராக இருந்தேன். ஆனால், அதனை அவர்கள் ஏற்கவில்லை. மேலும், அவர்கள் கூடுதலாக தொகுதிகள் வேண்டும் என்று கேட்டனர். இப்பொழுது சொல்கிறேன். அவர்களுக்கு ஒரு சீட் கூட நான் கொடுக்க மாட்டேன். பா.ஜ.க.வுடனான எங்கள் போராட்டம் தொடரும். பா.ஜ.க. எதிர்க்க தனித்து போராடுவோம். பா.ஜ.க தோற்கடிக்க எங்களால் முடியும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்