Skip to main content

திருட வந்த வீட்டில் இருந்த தொப்பியை பார்த்து மனம் மாறிய திருடன்... கேரளாவில் நடந்த சுவாரசிய சம்பவம்...

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

திருடுவதற்காக ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன், மனம் மாறி மன்னிப்பு கோரிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

 

kerala thief apology note on retired colonel house

 

 

கேரளாவின் கொச்சி அருகே உள்ள திருவாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரே நாளில் 5 கடைகளில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், திருடப்பட்ட ஒரு கடைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றிலும் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். எனவே அந்த வீட்டிலும் திருட்டு நடந்திருக்கலாம் என சோதனை நடத்தப்பட்டது. ஆனால் சோதனையின் போது, அங்கு ஏதும் திருடப்பட்டதாக கண்டறியப்படவில்லை.

அப்போது அந்த வீட்டின் சுவரில் திருடன் மன்னிப்பு கோரி எழுதிவைத்துவிட்டு சென்றது கண்டறியப்பட்டது. "இது ஒரு ராணுவ வீரரின் வீடு என்று தெரியாமல் உள்ளே நுழைந்துவிட்டேன். கடைசி நேரத்தில் தான் அவரின் தொப்பியை பார்த்து இது ராணுவ வீரரின் வீடு என எனக்கு தெரிந்தது. தெரியாமல் பூட்டை உடைத்து உள்ளே வந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்" என அந்த திருடன் சுவற்றில் எழுதிவைத்துவிட்டு எதையும் திருடாமல் சென்றுள்ளான். இந்நிலையில், இந்த திருட்டில் ஈடுபட்டது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்