சைக்கிள் பழுதுபார்க்கும் கடைக்காரர் ஒருவர் மீது சிறுவன் ஒருவன் அளித்த புகார் கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் விளையாட்டூரைச் சேர்ந்தவர் அபின் என்ற 10 வயது சிறுவன் மேப்பையூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளான். 25.11.2019 தேதியிடப்பட்ட பள்ளி நோட்டில் உள்ள காகிதத்தில் எழுதப்பட்ட அந்த கடிதத்தில், "நான் கடந்த செப்டம்பர் 5-ல் என்னுடைய மற்றும் எனது சகோதரரின் சைக்கிள்களை பழுது பார்க்க அருகிலுள்ள சைக்கிள் கடையில் கொடுத்தேன். அதை பழுது பார்ப்பதற்காக ரூ.200 பணமும் கொடுத்தேன். ஆனால், இன்று வரை அந்த சைக்கிள் கடைக்காரர் எங்களின் சைக்கிள்களை திரும்பத்தரவில்லை. நாங்கள் பலமுறை கேட்டும் முறையான பதிலில்லை. சில நேரங்களில் ஃபோன் அழைப்பையும் அவர் ஏற்பதில்லை. எங்கள் சைக்கிளை மீட்டுத்தரவும்" என மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது.
இந்த கடிதம் இணையத்தில் வைரலான நிலையில், இது குறித்து பேசிய மேப்பையூர் காவல்நிலைய அதிகாரி, "அவ்வப்போது பள்ளி மாணவர்களிடமிருந்து ஏதாவது புகார் மனுக்கள் வருவது வழக்கம். ஆனால் அவை பெரும்பாலும் போக்குவரத்து தொடர்பாக இருக்கும். ஆனால், இந்த குறிப்பிட்ட புகார் மனு எங்களை வெகுவாகக் கவர்ந்தது. அந்த மாணவன் அளித்த புகார் தொடர்பாக விசாரித்த போது, சம்பந்தப்பட்ட சைக்கிள் கடைக்காரர் உடல்நலக் குறைவு காரணமாகவும் தனது மகனின் திருமண வேலைகளாலும் சைக்கிளை பழுது பார்ப்பது தாமதமாகிவிட்டதாகக் கூறியுள்ளார்" என தெரிவித்தார்.