Skip to main content

‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

India' alliance leaders key advice

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூரில் பழங்குடியின மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில், அது கலவரமாக மாறியது.

 

இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

அதே சமயம் இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கூட்டணி சார்பில் எதிர்க்கட்சியினர், கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து 7 வது நாளான கடந்த 28 ஆம் தேதி வரை  இரு அவைகளிலும் மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவுவதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

 

இதையடுத்து வன்முறையால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்து இருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் கள நிலவரம் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்தும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் கொண்ட குழு மணிப்பூருக்கு நேரில் சென்று இரு குழுக்களாக ஆய்வு செய்தது. 21 எம்.பி.க்கள் கொண்ட இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி,  திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.  நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். கடந்த 4 ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் தாயாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இரு சமூகங்களைச் சேர்ந்த மக்களையும் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனர். மேலும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நேற்று  மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவுடன் சந்தித்துப் பேசினர். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை டெல்லி திரும்பினர்.

India' alliance leaders key advice

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்குக் கூட உள்ளது. இந்தச் சூழலில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மணிப்பூர் சென்று  வந்த 21 எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி, திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எடுத்துரைக்க வேண்டியவை குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மணிப்பூர் சென்ற எம்.பி.க்கள் குழுவினர் கள நிலவரத்தை எதிர்க்கட்சித் தலைவர்களிடம் விளக்கினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்