Skip to main content

தேர்தலின் போது நடந்த கல்வீச்சு சம்பவத்தால் பரபரப்பு!

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

The incident of stone pelting between the two parties during the Rajasthan election!

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். இதில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

 

அதே சமயம் ராஜஸ்தானில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் (23.11,2023) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (25.11.2023) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவானது மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 5 கோடியே 25 லட்சத்து 38 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமாக இருந்த குர்மீத் சிங் மறைவால், கரண்பூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதி ஆம் தேதி எண்ணப்படவுள்ளது. இந்த நிலையில், வாக்குப்பதிவின் போது இரு தரப்பினருக்கு இடையே கல்வீச்சு சம்பவம் நடந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

 

ராஜஸ்தான் மாநிலம், சிகார் பகுதியில் பதேபூர் சேகாவதி என்ற இடத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் அங்கு அந்த இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பான தகவலை அறிந்து காவல்துறையினரும், துணை ராணுவ படையினரும் அங்கு சென்று, நிலைமையை கட்டுப்படுத்தி வருகின்றனர். மேலும், இந்த மோதலில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

 

சார்ந்த செய்திகள்