டெல்லியில் ஜேஎன்யூ பல்கலைகழக மாணவர் சங்க தலைவர்களை மூடி அணிந்த சிலர் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

பல மாணவர்கள் இந்த சம்பவத்தில் காயம் அடைந்திருக்கிறார்கள். சிலர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். பல்கலைக்கழகத்திற்கு செல்லும் சாலைகள் அனைத்தும் போலீசாரால் மூடப்பட்டிருக்கிறது.

அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடந்த சம்பவத்தில் பல மாணவர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள். இந்த சமயத்தில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பாதுகாவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள், வெளி நபர்கள் எப்படி உள்ளே வர முடிந்தது, முகமூடி அணிந்து எப்படி தாக்குதல் நடத்தது, அதை தடுக்காமல் பாதுகாவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

இந்த தாக்குதலில் முகமூடி அணிந்தவர்கள் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் அல்லது ஏபிவிபி என்று சொல்லப்படும் வலதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவைப் பெற்ற இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக மாணவர் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தின்போது கேட்டிற்கு வெளியே பெரும் திரளாக பொதுமக்கள் குவிந்து இருப்பதாக போலீசார் தகவல் அளித்திருக்கிறார்கள். ஆகவேதான் பதற்றத்தைத் தணிப்பதற்காக அவர்கள் சாலைகளை மூடி வைத்திருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தால் மீண்டும் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.