Skip to main content

ப.சிதம்பரத்தின் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

கடந்த 2007- ம் ஆண்டு, ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்நிலையில் விசாரணைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாதிட்டனர். இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார். 
 

அதன் தொடர்ச்சியாக சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் இல்லத்திற்கு விரைந்தனர். ஆனால் வீட்டில் ப.சிதம்பரம் இல்லாததால் அதிகாரிகள் திரும்பி சென்றனர். இருப்பினும் நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் மீண்டும் ப.சிதம்பரம் இல்லத்திற்கு சென்று நோட்டீஸ் ஒட்டினர். மேலும் ப.சிதம்பரத்தின் மின்னஞ்சலுக்கும் நோட்டீஸ் அனுப்பினர். அதன் பிறகு நான்காவது முறையாக இன்று ப,சிதம்பரத்தின் இல்லத்திற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை விசாரிப்பதற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். அவரது இல்லத்தில் காலை முதல் சிபிஐ அதிகாரிகள் காத்திருக்கிறார்கள்.

 

 

former union minister p chidambaram inx media case supreme court friday investigate


 

உச்சநீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தரப்பில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை உடனடியாக விசாரிக்க ப.சிதம்பரம் வழக்கறிஞர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் மனுவில் பிழைகள் உள்ளதால் மீண்டும் மனுவை திருத்தம் செய்து தாக்கல் செய்யுமாறு  வழக்கறிஞர்களிடம் பதிவாளர் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து மனுவை மீண்டும் தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை பட்டியலில் இடம் பெறாததால், இது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் உடன் பதிவாளர் ஆலோசனை செய்து வருகிறார்.

 

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் கபில்சிபல் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோர் பதிவாளர் அலுவலகத்தில் காத்திருக்கின்றன. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு. அதேபோல் ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்சநீதிமன்ற நீதிபதி எந்த தடை உத்தரவும் விதிக்காததால், அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்