Skip to main content

இன்று வெற்றி பேரணி நடத்தும் விவசாயிகள் - வீடு திரும்புவர்களை வரவேற்க ஏற்பாடு!

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

farmers

 

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி 15 மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இதில் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு ஒரு வருடமாக விவசாயிகள் போராட்டம் நடத்திவந்தனர். இந்தநிலையில் கடந்த மாதம், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். 

 

இருப்பினும், குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம், போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்துவந்தனர். இந்தநிலையில், கடந்த ஒன்பதாம் தேதி மத்திய அரசு, விவசாயிகளுக்கு அதிகாரபூர்வமாக கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதத்தில், குறைந்தபட்ச ஆதார விலை குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்படும் எனவும் அந்த குழுவில் விவசாயிகளும் இடம்பெறுவார்கள் எனவும் மத்திய அரசு கூறியிருந்தது.

 

விவசாயிகள் மீதான வழக்குகள் உடனடியாக திரும்பப் பெறப்படும் எனவும், பயிர் கழிவுகளை எரித்ததற்கான வழக்குகளும் திரும்பப் பெறப்படும் எனவும் அந்தக் கடிதத்தில் கூறியிருந்த மத்திய அரசு, மேலும் மின்சார மசோதா, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவுடனான ஆலோசனைக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும், உத்தரப்பிரதேச, ஹரியானா அரசுகள் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

 

மத்திய அரசின் இந்தக் கடிதத்தை ஏற்றுக்கொண்ட விவசாயிகள், போராட்டத்தைக் கைவிடுவதாகவும், இன்றைய தினம் (11.12.21) போராட்ட களத்திலிருந்து விவசாயிகள் வெளியேறுவார்கள் எனவும் கடந்த 9ஆம் தேதி அறிவித்தனர். இந்தநிலையில் தற்போது விவசாயிகள், டெல்லியை எல்லையை விட்டு வெளியேற தயாராகிவருகின்றனர்.

 

வீடு திரும்பும் விவசாயிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க, வழியெங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், விவசாயிகள் தங்கள் போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து இன்று வெற்றி பேரணி நடத்தவுள்ளனர். நேற்று நடைபெற இருந்த இந்தப் பேரணி, முப்படைத்தளபதி பிபின் ராவத்தின் மறைவு காரணமாக இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.