Skip to main content

தமிழகத்தையே உலுக்கிய ஆணவக் கொலை வழக்கு; உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Published on 28/04/2025 | Edited on 28/04/2025

 

Supreme Court makes sensational verdict murugesan kannagi case

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது குப்பநந்தம் கிராமம். இந்த கிராமத்தின் புது காலணியைச் சேர்ந்த சாமி கண்ணு என்பவரின் மகன் முருகேசன். இவர் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆவர். இவரும் அதே பகுதியில் வசித்து வந்த வேறு சமூகத்தை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகள் கண்ணகி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து  இவர்கள் இருவரும் கடந்த 2003ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி (05.05.2003)பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த காதல் திருமணம் கண்ணகியினுடைய பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. மேலும் கண்ணகியை முருகேசன் அவரது உறவினர் வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் இருவரும் குப்பநத்தம் பகுதியில் உள்ள முந்திரிகாட்டு பகுதிக்கு அழைத்து வரப்பட்டு கண்ணகி மற்றும் முருகேசனின் மூக்கு, காதுகளில் விஷம் ஊற்றி ஊரே கூடி நின்று பார்க்க கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கி மிகவும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவம் நடைபெற்ற ஓராண்டுக்கு பிறகே வெளி உலகிற்கு இந்த ஆணவக் கொலை குறித்துத் தெரியவந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன்படி கடந்த 2021ஆம் ஆண்டு வழக்கினுடைய தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கொலை செய்யப்பட்ட கண்ணகியின் தந்தை துரைசாமி, கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டி உள்ளிட்ட 12 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அதில் மருது பாண்டிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த காவலர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.

இருப்பினும் கடலூர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சார்பில் மேல்முறையீடு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதன்படி உயர் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணை நடத்திக் கடந்த  2022ஆம் ஆண்டு தீர்ப்பு  வழங்கியிருந்தது. அதில் மருதுபாண்டிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அதே சமயம் கண்ணகியினுடைய தந்தை துரைசாமி உள்ளிட்ட 12 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையும் உறுதி செய்யப்பட்டது.

Supreme Court makes sensational verdict murugesan kannagi case

இதனையடுத்து ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட கண்ணகியின் உறவினரான கந்தவேல் மற்றும் ஜோதிமணி ஆகியோர் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று (28.04.2025) தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நீதிபதிகள் சுதன் சிங் துலியா தலைமையிலான அமர்வானது இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில் கொலையாளிகளுக்கு உயர் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளனர். அதோடு குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி மணி ஆகியோருடைய மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இந்த படுகொலைக்குப் பிறகு தான் ஆணவ படுகொலை என்ற பதம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்