
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள ‘டெல்லி சலோ' என்ற மாபெரும் பேரணி, பல தடைகளைக் கடந்து டெல்லி சென்றடைந்தது. டெல்லியின், புராரி பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில், அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து 50 - நாளை கடந்து விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் குடியரசு நாளில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் பேரணிக்கு அனுமதி அளிப்பது என்பது காவல்துறையின் நடவடிக்கைகளில் ஒன்று, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளது.