Skip to main content

புதுச்சேரி இ.எஸ்.ஐ அலுவலகத்தில் சி.பி.ஐ அதிரடி சோதனை..! சிக்கிய ஆவணங்கள்..! 

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

CBI raids Puducherry ESI office and Trapped documents

 


புதுச்சேரி முதலியார் பேட்டையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக மண்டல அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இந்த மண்டல அலுவலகத்தின் கீழ் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் 6 கிளை அலுவலகங்கள், 2 இ.எஸ்.ஐ மருந்தகம், ஒரு மருத்துவமனை ஆகியவை இயங்கிவருகின்றன.

 

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள் இவற்றின் மூலம் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. 

 

இ.எஸ்.ஐ மண்டல அலுவலகத்தின் கீழ் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெற்றுவருகின்றனர். இந்த நிலையில், மருத்துவக் காப்பீடு நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளை மிரட்டி இ.எஸ்.ஐ அதிகாரிகள் சிலர் லஞ்சம் வாங்கி முறைகேட்டில் ஈடுபடுவதாக சென்னை சி.பி.ஐ அலுவலகத்துக்குப் புகார்கள் சென்றன. அதையடுத்து நான்கு பேர் கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள் குழுவினர் நேற்று (28.07.2021) மதியம் புதுச்சேரி இ.எஸ்.ஐ மண்டல அலுவலகத்துக்கு 2 கார்களில் வந்தனர். கார்களைக் கேட்டுக்கு வெளியே நிறுத்தி, அதிலிருந்து இறங்கிய அதிகாரிகள் அலுவலகத்தினுள் சென்றனர். அலுவலக தரை தளத்தில் வாயில் அருகே பணியில் இருந்த இரண்டு தனியார் செக்யூரிட்டிகளுக்கு வருவது சி.பி.ஐ அதிகாரிகள் என தெரியவில்லை. அதனால் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டுச் செல்லுமாறு அவர்களிடம் கூறினர். அதற்கு அவர்கள், “சி.பி.ஐ அதிகாரிகள் வந்துள்ளோம். வந்து சொல்கிறோம்” என கூறி, முதல் தளத்தில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

 

முதலாவதாக அனைத்து தொலைபேசி இணைப்புகளையும் துண்டித்தனர். பின்னர் கதவுகளை இழுத்து மூடினர். யாரையும் உள்ளே வெளியே அனுமதிக்கவில்லை. அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனையில், ஒரு தொழிற்சாலை நிறுவனத்திடமிருந்து ரூபாய் 25 ஆயிரம் லஞ்சம் வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக 2 பேர் சிக்கினர். தொடர்ந்து விசாரணை நடத்திய சி.பி.ஐ அதிகாரிகள், அங்கிருந்த ஆவணங்கள், கணினி உள்ளிட்ட அனைத்தையும் சோதனையிட்டனர். அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இரவு 7.25 மணி வரை சோதனை நீடித்தது. சோதனை முடிந்து லஞ்ச மோசடி தொடர்பாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மண்டல துணை இயக்குநர் பெட்ராஸ், சமூக பாதுகாப்பு அதிகாரி மோஹித் ஆகிய இருவரைக் கைது செய்தனர். பின்னர் இருவரையும் தாங்கள் வந்த  கார்களில் ஏற்றி சென்னைக்கு அழைத்துச் சென்றனர். ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

 

புதுச்சேரி இ.எஸ்.ஐ மண்டல அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய திடீர் அதிரடி சோதனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திர முறைகேடு; எஸ்.ஐ.டி. விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Electoral bond SIT A case in the Supreme Court for investigation

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தேர்தல் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்த தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்த பத்திரங்களை கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாக வழங்கலாம். மேலும், அந்த கட்சிகள் 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி இதனை நிதியாக மாற்றிக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், அந்தத் தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்று அந்தத் திட்டத்தில் கூறப்பட்டது.

இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி (15.02.2024) தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதம் என தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்து சிறப்பு புலானாய்வு குழு (S.I.T. - Special Investigation Team) அமைத்து விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது. பொதுநல வழக்குகள் மற்றும் பொதுநலன் ஆகிய அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், “அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை விசாரணையில் சிக்கிய பல நிறுவனஙகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்துள்ளதால் விரிவான விசாரணை தேவை. முக்கிய விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை ஊழலுக்கு துணை போயிருக்கின்றன. எனவே இது தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.