மத்திய பிரதேச மாநிலம் சட்டர்பூரிலுள்ள கோவிலில் மழையை வரவழைப்பதற்காக பாஜக அமைச்சர் இரு தவளைகளுக்குத் திருமணம் செய்துவைத்த சம்பவம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் லலிதா யாதவ் நடத்திய இந்த வினோத தவளைத் திருமணத்தைக் காண்பதற்கு கோவில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்துள்ளனர். இந்த சடங்கின் மூலம் இவ்வாண்டு நல்லமுறையில் பருவமழை பெய்யும் என்ற கோவிலின் பூசாரி ஆச்சார்யா ப்ரிஜ்னந்தன் கூறியது, "வேண்டுதலுக்காக தவளைகளுக்குத் திருமணம் செய்துவைப்பதோடு, விருந்தளிப்பது என்பது காலங்காலமாக இருக்கும் வழக்கம்."
மாநில அமைச்சரின் இந்தச் செயல்பாடு மூடநம்பிக்கையை ஊக்குவிப்பதாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இதற்கு பதிலளித்த அமைச்சர் லலிதா யாதவ், "சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்துக்கொள்வதற்கு தேவையான ஓர் அறிவார்ந்த வழக்கம் இது" என்று கூறியுள்ளார். ம.பி. பண்டல்கந்த் பகுதியின் சட்டர்பூர் தொகுதி பிரதிநிதியாக லலிதா யாதவ் இருக்கிறார்.
இதேபோன்று மழைக்காக நடத்தப்பட்ட ஒரு வினோதத் திருமணம் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் மணமக்கள் கோலத்தில் இருவர் அமர்ந்துகொண்டு, இரண்டு பிளாஸ்டிக் தவளைகளுக்குத் திருமணம் செய்துவைத்தனர்.