
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மூன்று மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) 27.03.2024 அன்று மூன்று மாநிலங்களில் பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. கர்நாடகாவில் 12, தமிழ்நாட்டில் 5 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ஒன்று உட்பட மொத்தம் 18 இடங்களில் என்.ஐ.ஏ. குழுக்கள் சோதனை செய்த பின்னர் முஸம்மில் ஷரீப் கைது செய்யப்பட்டு துணை குற்றவாளியாக காவலில் வைக்கப்பட்டார்.

பெங்களூரு குண்டுவெடிப்பில் தேடப்பட்டு வரும் முஷாவீர் ஹுசைன் ஷாஹிப், அப்துல் மதீன் அகமது தாஹா, ஆகியோரின் புகைப்படத்தையும், இவர்கள் இருவர் பற்றிய தொடர்புடைய முழு விபரங்களையும் என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ளது. மேலும் இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 08029510900, 8904241100 என்ற தொலைபேசி எண்களுக்கோ தெரிவிக்கலாம் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பெங்களூர் ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு தொடர்பாக பாஜக பிரமுகர் சாய்பிரசாத் என்பவரிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. சிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகரான சாய் பிரசாத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பை நிகழ்த்திய குற்றவாளிகளுக்கும் பாஜக பிரமுகர் சாய் பிரசாத்துக்கும் இடையே தொடர்பு இருப்பதாக வெளியான சந்தேகத்தின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.