
அயோத்தியில் நாளை ராமர் கோயில் பூமி பூஜை நடைபெற உள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள குரங்குகளுக்கு சிறப்பு உணவு வழங்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் சூழலில், அதற்கான பூமி பூஜை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாளை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ளச் சூழலில், உணவுக்காக முக்கியப் பிரமுகர்களுக்குக் குரங்குகள் தொல்லை தரும் ஆபத்தும் இருப்பதாக அஞ்சப்படுகிறது. இதைச் சமாளிக்கும் வகையில், அப்பகுதியில் உள்ள குரங்குகளுக்குப் பழங்கள், தானியங்கள் உள்ளிட்ட சிறப்பு உணவுகளை வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சிறப்பு ஏற்பாட்டினை அரசு சார்பில் செய்யவும் அயோத்தி மாவட்ட நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.