![60 pregnant women tested positive for HIV in UP government hospital](http://image.nakkheeran.in/cdn/farfuture/ybg5y-z8FQ76ua0pPAQhjzjlbkxuDHtM0lDoToLWeYo/1691383840/sites/default/files/inline-images/994_192.jpg)
உ.பி அரசு மருத்துவமனையில் 60 கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா லஜபதி ராய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 60 கர்ப்பிணிகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 16 மாதங்களில் 80க்கும் மேற்பட்டவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 60 கர்ப்பிணிகளும் மீரட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 35 பேருக்குக் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அந்த குழந்தைகளுக்கு ஒன்றறை ஆண்டுகள் கழித்து, எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி எச்.ஐ.வி பரவியது என்று கண்டறியக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மீரட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.