Skip to main content

‘ராகுல் காந்திக்கு 5வது வரிசை’ - காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம்!

Published on 15/08/2024 | Edited on 15/08/2024
'5th row for Rahul Gandhi' - Congress leaders strongly condemned

நாட்டின் 78வது சுதந்திர தின கொண்டாட்டம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிலையில் செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடைசி வரிசைக்கு முந்தைய வரிசையில் (முதலில் இருந்து 5வது வரிசை) அமர்ந்திருந்தார். ராகுல் காந்தி பின் வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதாக மத்திய அரசின் விளக்கம் ஏற்புடையதல்ல. மத்திய அமைச்சர்களான அமித்ஷா, நிர்மலா சீதாராமன் மட்டும் எப்படி முன்வரிசையில் இருக்கைகள் பெற்றனர்?. மத்திய அமைச்சருக்கு இணையான அந்தஸ்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவருக்கு முன்வரிசையில் இருக்கை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். நெறி முறைப்படி நாடாளுமன்றத்தின் இரு அவை எதிர்க்கட்சித் தலைவர்களும் முன்வரிசையில் இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

'5th row for Rahul Gandhi' - Congress leaders strongly condemned

மேலும் இந்த சம்பவத்திற்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத்தில் மக்களவையின் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவராகப் பொறுப்பு வகிக்கின்ற ராகுல் காந்தியைத் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கடைசி வரிசைக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கி மத்திய பா.ஜ.க. அரசு அவமதித்துள்ளது. இதற்கு விளக்கம் அளிக்கிற பாதுகாப்பு அமைச்சகம் ஒலிம்பிக் வீரர்களைக் கௌரவப்படுத்த அவர்களை முன் வரிசையில் அமர்த்தியதால் இந்த நிகழ்வு ஏற்பட்டதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மத்திய கேபினெட் அமைச்சர்களாக இருக்கிற ராஜ்நாத்சிங், அமித்ஷா, ஜெ.பி. நட்டா, நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்பது கேபினெட் அமைச்சர்களுக்கு இணையான பதவியாகும். அந்த வகையில் பார்க்கும்போது கேபினெட் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் அருகில் இடம் ஒதுக்காமல் பின் வரிசையில் இடம் ஒதுக்கியிருப்பது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை ஆகும். அதேபோல அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவுக்கும் ஐந்தாவது வரிசையில் தான் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

'5th row for Rahul Gandhi' - Congress leaders strongly condemned

பாராளுமன்ற ஜனநாயகத்தில் மிகுந்த எழுச்சியோடு ஆற்றல் மிக்கவராக ராகுல் காந்தி செயல்படுவதைச் சகித்துக்கொள்ள முடியாத மோடி அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்தகைய மலிவான செயல்களில் ஈடுபட்டு வருவதைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்