60 நாட்களில் 50 மாணவர்கள் தற்கொலை! - பயிற்சி நிறுவனங்களால் விபரீதம்!
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், கடந்த 60 நாட்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பயிற்சி நிறுவனங்களில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தமே இதற்குக் காரணம் என கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து, ஆங்கில ஊடகம் வெளியிட்ட செய்தியில், ஹைதராபாத்தைச் சேர்ந்த சம்யுக்தா எனும் மாணவி கடந்த திங்கள் கிழமை தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்குமுன் எழுதியிருந்த தற்கொலைக் கடிதத்தில், தனது படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனதால் தற்கொலை செய்துகொள்வதாக குறிப்பிட்டிருந்தார். சம்யுக்தா தனது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95% மதிப்பெண் பெற்றவர் என்பதும், மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவோடு பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஓட்டுநராக பணிபுரியும் சம்யுக்தாவின் தந்தை, தனது மகள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க முடியவில்லை என தெரிவித்ததாகவும், பயிற்சி வகுப்புகளில் சேர்க்கையில் தங்கள் பிள்ளைகளின் மனநிலையை பெற்றோர்கள் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சில தினங்களுக்கு முன்னர் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த ஒரு மாணவி, தனது இந்த முடிவிற்கு காரணம் பயிற்சி நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட அழுத்தம்தான் காரணம் என தெரிவித்துள்ளார். மேலும், தான் பயிற்சி நிறுவனத்தில் படிப்பதற்கு தகுதியற்றவள் என்றும், வீதியில் அலையுமாறும் பயிற்சி நிறுவனத்தில் கூறியதால் மனமுடைந்து போனதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதைக் கருத்தில் கொண்டு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பயிற்சி நிறுவனங்களுக்கு சில விதிமுறைகளை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.