Skip to main content

குளிர்கால கூட்டத்தொடர்: நாளை காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டம் நடத்தவிருக்கும் எம்.பிக்கள்!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

parliament

 

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (29.11.2021) தொடங்கிய நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் வன்முறையாக நடந்துகொண்டது மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை உள்நோக்கத்தோடு தாக்கியதன் மூலமாக அவையின் மாண்பைக் குலைத்தது ஆகியவற்றுக்காக காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

 

இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், இதுதொடர்பாக மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடுவிடம் முறையிட முடிவு செய்தனர். இதற்கிடையே நாடாளுமன்றம் கூடிய நிலையில், 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மக்களவையிலிருந்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

 

இதற்கிடையே மாநிலங்களவை கூடியதும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை திரும்பப் பெறுமாறு சபாநாயகர் வெங்கையா நாயுடுவிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் வெங்கையா நாயுடு இடைநீக்கத்தை திரும்பப் பெற மறுப்பு தெரிவிக்கவே, மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி எம்.பிக்கள், நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்தநிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களது இடைநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதவுள்ளனர். மேலும், இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் நாளை நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மேலும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளார்.

 

இதற்கிடையே திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, இடைநீக்கம் செய்யப்பட்ட தங்களது எம்.பிக்கள் இருவரும், நாளை முதல் டிசம்பர் 23ஆம் தேதிவரை, காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரை காந்தி சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவர் என அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இன்று அறிவிக்கப்பட உள்ளதா தேர்தல் தேதி?

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Election date to be announced today?

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று அல்லது நாளை நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையர்கள் இருவர் பதவியேற்ற நிலையில் விரைவில் அட்டவணை வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சாந்து சற்றுமுன் பதவி ஏற்று கொண்டனர். அதேநேரம் நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தயார் நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ளன. இதனால் இன்று அல்லது நாளை 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதியை முடிவெடுப்பதற்கான தேர்தல் ஆணையர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. 

தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வெளிமாநிலங்களில் இருந்து ராணுவ படையினர் தமிழகம் வந்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

புதிய தமிழகம் கிருஷ்ணசாமியிடம் முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை 

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Former ministers talk to Krishnasamy

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகமும் தொடங்கியுள்ளது. பாமக, தேமுதிக,புரட்சி பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து அதிகாரப்பூர்வமாகப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்த நிலையில், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் புதிய தமிழகம் கட்சி அலுவலகத்திற்கே சென்று ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.