Skip to main content

விநாயகர் சிலை ஊர்வலத்தில் வன்முறை; உடனடியாக வந்த 144 தடை உத்தரவு!

Published on 12/09/2024 | Edited on 12/09/2024
144 injunction on incident at Ganesha idol procession

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 7ஆம் தேதி கொண்டாடப்பட்டது. ஏராளமான மக்கள், தங்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனர். அன்றைய தேதியில் வழிபட்ட விநாயகர் சிலைகளை, இறுதி நாட்களிலோ அல்லது மக்கள் தங்கள் விருப்பப்படும் நாட்களிலோ நீர்நிலைகளில் வைத்து கரைப்பது வழக்கமான ஒன்றாகும். 

அந்த வகையில், கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம் படரிகொபலு என்ற கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை நீர்நிலையில் கரைக்க அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்று இரவு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அந்த ஊர்வலமானது, நாகமங்களா என்ற பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் அமைந்துள்ள பகுதி அருகே வந்தது. அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு மதத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் ஒரு கட்டத்தில் வன்முறையானது. இரு தரப்பும் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கியும், சாலையில் இருந்த கடைகள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை அடித்து தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த வன்முறையை தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து நாகமங்களா டவுன் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், வன்முறை சம்பவத்தை அடுத்து நாகமங்களாவில் உடனடியாக 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்த தடை உத்தரவு அடுத்த 24 மணி நேரத்திற்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்